சிங்கப்பூரில் 200,000 முதியவர்கள் இன்னமும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள். 60 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள அந்த முதியவர்கள், உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தி கூறி இருக்கிறார்.
இந்நிலையில், மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன், துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் ஆகிய மூவரும் முதியோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிக முக்கியமானது என்பதை ஃபேஸ்புக்கில் சுட்டிக்காட்டினர்.
தடுப்பூசி பாதுகாப்பானது. காலம் கடந்து விடுவதற்கு முன் விழித்துக்கொள்ளுங்கள் என்றும் ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது கட்டாயமானது என்றும் அந்த மூவரும் விளக்கினர்.
சிங்கப்பூர் முழுவதும் நடமாடும் தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதை கொவிட்-19 சிறப்புப் பணிக்குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான நிதி அமைச்சர் திரு வோங் சுட்டினார்.
தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ, பிரிட்டன், இஸ்ரேல் போன்ற நாடுகளில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டோரின் அளவு, சிங்கப்பூரின் அளவைவிட அதிகம் என்பதைச் சுட்டினார்.
அந்த நாடுகளின் நிலவரங்களில் இருந்தும் கடந்த சில வாரங்களில் நாம் சந்தித்த அனுபவத்தில் இருந்தும் சிங்கப்பூர் பலவற்றையும் கற்றுக்கொள்ள முடியும் என்றும் திரு டியோ தெரிவித்தார்.
பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான துணைப் பிரதமர் திரு ஹெங், முதியவர்கள் முன்பதிவு செய்யாமலேயே நேரடியாகச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.