சிங்கப்பூரில் ஒரு வங்கியில் $30,000க்கும் மேற்பட்ட தொகை யைக் கொள்ளை அடித்த, கனடாவைச் சேர்ந்த டேவிட் ஜேம்ஸ் ரோச் என்ற ஆடவருக்கு ஜூலை 7ஆம் தேதி ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆறு பிரம்படிகள் கொடுக்கும்படியும் உத்தரவிடப்பட்டது.
என்றாலும் பிரம்படிகள் அவருக்குக் கொடுக்கப்படமாட்டா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் 2016ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி கொள்ளை அடித்த ரோச்சுக்கு விதிக்கப்பட்ட பிரம்படித் தண்டனை ரத்தானதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது.
கொள்ளை அடித்துவிட்டு ரோச் சிங்கப்பூரை விட்டு தப்பிச் சென்றுவிட்டார். பிரிட்டனில் இருந்த அவரை இங்கு திருப்பி அனுப்பும்படி சிங்கப்பூர் கோரிக்கை விடுத்தது.
ரோச் சிங்கப்பூருக்குத் திருப்பி அனுப்பப்படும் பட்சத்தில் அவருக்குப் பிரம்படித் தண்டனை கொடுக்கப்படாது என்று பிரிட்டனிடம் சிங்கப்பூர் உறுதி தெரிவித்தது. அதை நிறைவேற்றும் வகையில் அந்தத் தண்டனை ரத்தானதாக அமைச்சு குறிப்பிட்டது.
அமைச்சரவை ஆலோசனையின் பேரில், சிங்கப்பூர் அரசமைப்புச் சட்டப் பிரிவு 22பி(1)ன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிபர் அந்த ஆறு பிரம்படித் தண்டனையை ரத்து செய்து இருக்கிறார் என்றும் அமைச்சு தெரிவித்தது.
பிரிட்டனுக்கு கொடுத்த உறுதியை இதன் மூலம் சிங்கப்பூர் அரசாங்கம் நிறைவேற்றி இருக்கிறது என்றும் பிரம்படிக்குப் பதிலாக ரோச்சுக்கு வேறு தண்டனை எதுவும் இராது என்றும் உள்துறை அமைச்சு தெரிவித்து உள்ளது.