சிங்கப்பூரில் விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டு சுறுசுறுப்பாக இருந்து வரும் இளையர்களிடையே முழங்கால் மூட்டு விலகிவிடும் சம்பவங்கள் அதிகமாகி இருக்கின்றன.
ஒவ்வோர் இரண்டு வாரங்களுக்கும் சராசரியாக நான்கு பேர் அத்தகைய நிலைக்கு ஆளாவதாக தேசிய பல்கலைக்கழக மருத்துவ மனை தெரிவித்துள்ளது.
இந்தச் சராசரி விகிதம் 2016ல் இரண்டு வாரங்களுக்கு ஒன்றாக இருந்தது. முழங்கால் மூட்டு விலகிவிடும் விபத்துகள் பொதுவாக பதின்ம வயதினரிடையே நிகழ்வதாகத் தெரிகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் சிறார் எலும்பு மூட்டு சிகிச்சை துறை இப்போது ஆண்டுக்கு ஏறத்தாழ 100 பேருக்கு இத்தகைய சிகிச்சையை அளிக்கிறது.
முழங்கால் முட்டியை வேகமாகத் தரையில் ஊணும்போது அல்லது காலை வேகமாக திருப்பும்போது மூட்டு விலகிவிடுவதுண்டு.
நடனம் ஆடும்போது, காற்பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டுகளில் ஈடுபடும்போது இத்தகைய சங்கடங்கள் ஏற்படலாம்.
என்றாலும் ஓட்டப்பந்தயத்தில் ஓடும்போது முழங்கால் மூட்டு விலகிவிடக்கூடிய வாய்ப்பு குறைவு தான். இருந்தாலும் முட்டி பலவீனமானவர்களுக்கு இந்த ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு.
பதின்ம வயது இளையர்கள் காற்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள்.
இதுவே முழங்கால் மூட்டு விலகிவிடும் சம்பவங்கள் அதிகரித்து இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம் என்று இந்தப் பல்கலைக்கழகத்தின் எலும்பு அறுவை சிகிச்சை துறைத் தலைவர் பேராசிரியர் ஜேம்ஸ் ஹுய் தெரிவித்தார்.
உலகளவில் 100,000 சிறார்கள் மற்றும் பதின்மவயதினரில் ஏறத்தாழ 40 பேருக்கு இந்த வகை பாதிப்பு ஏற்படுகிறது.
15 வயது சிறார்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். முதல் முறை முழங்கால் மூட்டு விலகிவிடும் போது பெரும்பாலும் அறுவை சிகிச்சை தேவைப்படாது. அவர்கள் பயிற்சி சிகிச்சை மூலம் சரிசெய்து விடலாம்.
என்றாலும் திரும்பத் திரும்ப அதே பிரச்சினை ஏற்பட்டால் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
முழங்கால் மூட்டுப் பிரச்சினை மீண்டும் மீண்டும் ஏற்பட்டால் அத்தகைய பாதிப்புக்கு என்ன காரணம் என்பதைக் கண்டுபிடித்து சிகிச்சையை நாட வேண்டியது முக்கியமானது என்று பேராசிரியர் ஹுய் தெரிவித்தார்.

