சிங்கப்பூர் மக்கள்தொகையில் 54 விழுக்காட்டினர் இரண்டு 'எம்ஆர்என்ஏ' கொவிட்-19 தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டனர். நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் விகிதம் ஒவ்வொரு நாளும் ஒரு விழுக்காட்டுப் புள்ளி உயர்ந்து வருகிறது.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங் இந்தப் புள்ளிவிவரங்களை நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
தேசிய தினவாக்கில் ஏறக்குறைய 70 விழுக்காட்டினர் இரு 'எம்ஆர்என்ஏ' தடுப்பூசிகளையும் போட்டிருப்பர் என்றும் செப்டம்பர் தொடக்கத்தில் அவ்விகிதம் 80 விழுக்காடாக உயரும் என்றும் திரு ஓங் கூறினார்.
"இதன்மூலம், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் இருக்கும். இது நம்மை கொவிட்-19 மீள்திறன் சமூகம் என்ற வலுவான நிலைக்கு உயர்த்தும்," என்றார் அமைச்சர்.
இருப்பினும், மூத்த குடிமக்கள், குறிப்பாக 70 வயதும் அதற்கும் மேற்பட்டவர்களில் பலர் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பது கவலையளிப்பதாக உள்ளது என்று அவர் சொன்னார். இப்போதைக்கு, அவ்வயதுப் பிரிவினரில் 70 விழுக்காட்டிற்கு மேற்பட்டோர் இரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர்.
ஆயினும், அதிகமான முதியவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தடுப்பூசி மையங்களை நாடுகின்றனர் அல்லது நடமாடும் தடுப்பூசிக் குழுவினர் மூலம் தடுப்பூசி போட்டு வருகின்றனர் என்று திரு ஓங் குறிப்பிட்டார். இந்த வழிகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முதியோர் எண்ணிக்கை கடந்த சில நாள்களில் இரட்டிப்படைந்துள்ளது என்றும் அதாவது கிட்டத்தட்ட 500லிருந்து 1,000க்கும் மேல் என்ற நிலையை எட்டியுள்ளது என்றும் அவர் சுட்டினார்.
ஒன்பது குழுவினர் முதியோரின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர் என்றும் இம்மாதம் 23ஆம் தேதிவரை அப்படி 734 பேர்க்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
முதியோர்க்குத் தடுப்பூசி போட நடமாடும் தடுப்பூசிக் குழுவினர் புலாவ் உபினுக்குச் செல்வது போன்ற வேறு அணுகுமுறைகளும் கையாளப்படுவதாக அமைச்சர் ஓங் சொன்னார்.
முதலில் தடுப்பூசி போட இணங்கச் செய்து, தடுப்பூசி போட்டபின் உடல்நிலையைக் கண்காணிக்கும் வகையில் ஒருநாள் முழுதும் தங்களது மருந்தகங்களில் தங்கும்படி செய்து, தங்கள் நோயாளிகளுக்கு உறுதியளிக்கும் மருத்துவர்கள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
"இது நாம் எத்தகைய சமூகத்தினர் என்பதை அளவிடுவதாக உள்ளது. மற்ற நாடுகளில் எதிர்கொண்டதை அல்லது இன்னும் எதிர்கொண்டு வருவதைப்போல, முதியோரிடத்தில் கொரோனா இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இல்லை என்பதையே அவர்களுக்காக நாம் எடுத்துவரும் இத்தகைய வியத்தகு முயற்சி காட்டுகிறது," என்றார் திரு ஓங்.
இத்தகைய முயற்சிகளால், 70 வயதும் அதற்கும் மேற்பட்டோரில் 77 விழுக்காட்டினர் தங்களது முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுவிட்டனர் என்றும் இன்னும் ஒரு மாத காலத்தில் அவர்கள் 2வது தடுப்பூசியைப் போட்டுக்கொள்வர் என்றும் அவர் சொன்னார்.

