அடுத்த ஆண்டு விற்பனைக்கு விடப்படும் பிடிஓ வீடுகளின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டம் இல்லை என்றும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இவ்வாண்டு திட்டமிட்டபடி 17,000 வீடுகளை விற்பனைக்கு விட ஆயத்தமாகி வருகிறது என்றும் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு 17,000 அல்லது அதற்கும் அதிகமான வீடுகள் விற்பனைக்கு விடப்படும் என்றும் இவ்வாண்டு எண்ணிக்கையைவிட அது குறையாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கொரோனா கிருமிப் பரவலால் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு தீர்வுகாண வீவக தொடர்ந்து குத்தகை நிறுவனங்களுடன் பணியாற்றி வருவதாக அவர் கூறினார். பிடிஓ வீடுகளின் விநியோகம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கான் தியாம் போ, டெஸ்மண்ட் சூ ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு திரு லீ பதில் அளித்தார்.
அடுத்த ஆண்டில் வீடுகளுக்கான தேவையைக் கணித்தும் சொத்துச் சந்தையைக் கண் காணித்து வருவதாகச் சொனனார் திரு லீ. அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் வீடுகளின் எண்ணிக்கை விரைவில் அறிவிக்கப்படும் என்றார் அவர்.
முந்தைய இரண்டு ஆண்டுகளைவிட இவ்வாண்டு அதிகமான வீடுகள் விற்பனைக்கு வருகின்றன. கடந்த 2019ல் 14,600 வீடுகளும் கடந்த ஆண்டு 16,800 விடுகளும் விற்பனைக்கு விடப்பட்டன.
அத்துடன், பிடிஓ வீடு வாங்குவோர் கட்டுமானத் தாமதத்தால் பாதிக்கப்பட்டு, தங்கள் பதிவை ரத்து செய்ய முடிவு செய்யலாம். அப்போது தாங்கள் செலுத்திய முன்பணம் அல்லது தெரிவுக் கட்டணத் தொகையை அவர்கள் இழக்க வேண்டியிருக்கும். மீண்டும் விண்ணப்பிக்க காத்திருக்கவும் வேண்டியிருக்கும்.
விண்ணப்பதாரரின் தனிப்பட்ட சூழ்நிலையைப் பொறுத்து, அத்தொகையைப் பறிமுதல் செய்யாமல் இருப்பது பற்றி வீவக முடிவெடுக்கும் என்றார் திரு லீ.
கட்டுமானச் செலவுகளின் அதிகரிப்புக்கு வீட்டு விலைகளும் உயர்த்தப்படாது என்று அமைச்சர் திரு டெஸ்மண்ட் லீ குறிப்பிட்டார்.

