சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி உள்ளூரில் புதிதாக 129 பேருக்கு கொரோனா தொற்றியது. அவர்களில் 61 பேர் ஜூரோங் மீன்பிடித் துறைமுகத் தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள் என்று சுகாதார அமைச்சு நேற்று அதன் அன்றாட அறிக்கையில் கூறியது.
அதன்படி, ஜூரோங் மீன்பிடித் துறைமுகத் தொற்றுக்குழுமத்தில் மொத்தம் 853 பேர் உள்ளனர்.
மேலும், 'கேடிவி' நிலையக் குழுமத்தின் தொடர்பில் ஆறு புதிய தொற்றுச் சம்பவங்கள் கண்டறியப்பட்டன. அக்குழுமத்தில் உள்ள தொற்றுகளின் எண்ணிக்கை மொத்தம் 243 ஆகும்.
நேற்று அறிவிக்கப்பட்ட 129 சம்பவங்களில் முன்னதாக கண்டறியப்பட்ட 76 தொற்றுச் சம்பவங் களுடன் தொடர்புள்ளவை. அவர்கள் ஏற்கெனவே தனிமையில் இருந்து வந்தனர். மேலும் 25 சம்பவங்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் கண்டறியப்பட்டன.
மீதமுள்ள 28 சம்பவங்கள் வேறு தொற்றுச் சம்பவங்களுடன் தொடர்பில்லாதவை. அவர்களில் ஒருவர் 70 வயதுக்கும் அதிகமான முதியவர். ஒரு தடுப்பூசி போடப்பட்டுள்ளபோதும் அவருக்கு கடும் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
அத்துடன், வெளிநாட்டிலிருந்து வந்த ஆறு பேருக்கு உண்டானது.
இதற்கிடையே கேலாங் பாரு சந்தை, உணவங்காடி அருகிலும் 146 டெக் வாய் அவென்யூ சந்தை அருகிலும் வசிப்பவர்கள் நேற்று தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச விரைவு கிருமிப் பரிசோதனைக் கருவிகளைப் பெற்றுக்கொள்ளத் தொடங்கினர். இன்றுவரை அந்த விநியோக நடவடிக்கை தொடரும்.
கடந்த இரண்டு வாரத்தில் தேர்வு செய்யப்பட்ட சந்தைகளுக்குச் சென்று வந்தவர்களுக்கும் அவற்றின் அருகில் வசிப்பவர்களுக்கும் பரிசோதனைக் கருவிகளை வழங்க மக்கள் கழகத்துடன் இணைந்து சுகாதார அமைச்சு பணியாற்றி வருகிறது.

