கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து, 15000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பொதுத் துறையில் அல்லது அரசாங்க நிதி பெற்ற குறுகிய காலப் பணிகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டதாக மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் நேற்று கூறினார்.
இவர்கள் எஸ்ஜி ஒற்றுமை வேலைகள், திறன்கள் தொகுப்புத் திட்டத்தின் கீழ், கொவிட்-19 பரவல் தொடர்பான வேலைகளில் பணி அமர்த்தப்பட்டனர். கிருமிப் பரிசோதனை செய்தல், நோயாளி சேவைகளை வழங்குதல், இல்லத் தனிமை உத்தரவு நடைமுறைகள், பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துதல் ஆகிய பணிகளை இவர்கள் செய்துள்ளனர்.
கொரோனா பரவலுக்குப் பின்னர் இப்பணியாளர்களின் நிலையைப் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஷாரில் தாஹா, ரயீஸா கான் இருவரும் எழுப்பிய கேள்வி களுக்கு அவர் பதில் அளித்தார்.
மோசமாகப் பாதிக்கப்பட்ட துறைகளில் உள்ள ஊழியர் களுக்கு உதவும் தேசிய வேலைகள் மன்ற முயற்சியின் பகுதியாக பத்தில் மூன்று பேர் தற்காலிக வேலைகளில் அமர்த்தப்பட்டனர். இவர்கள் கிருமிப்பரவல் தாக்கம் தணிந்தபின்னர் தங்கள் முந்தைய வேலைகளுக்குத் திரும்புவர் என்று எதிர்பார்ப்பதாக டாக்டர் டான் கூறினார். மற்றவர்கள், வேலை தேடித்தரும் சேவைகள், மனிதவள அமைச்சின் சேவைகள் ஆகியவற்றில் வேலை தேடிப் பெறாலாம் என்றார் அவர்.

