கொரோனா கிருமியுடன் வாழப் பழகிக்கொள்ளும் முயற்சியில் சிங்கப்பூர் அதன் பரிசோதனைத் திட்டத்தை விரிவுபடுத்தி வருகிறது. இதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் கொவிட்-19 சுய பரிசோதனைக் கருவிகள் கட்டங்கட்டமாக வழங்கப்படவுள்ளன.
இந்த ஆண்டிஜன் விரைவு பரிசோதனைக் கருவிகள் தற்போது சில்லறை வர்த்தகக் கடைகளில் கிடைக்கின்றன. அடுத்து, அரசாங்கம் கருவிகளைக் குடியிருப்புகளுக்கும் வழங்கத் திட்டமிட்டுள்ளது.
பெரிதளவிலான கொவிட்-19 கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவாகியுள்ள வட்டாரங்களில் முதலில் கருவிகள் விநியோகம் செய்யப்படும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இக்கருவிகளுடன் பரிசோதனை செய்வதற்கான வேறு வழிகளையும் சிங்கப்பூர் நடைமுறைப்படுத்தும். சுவாசப் பரிசோதனை சாதனம் அவற்றில் ஒன்று. நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னர் இத்தகைய சுவாசப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றார் திரு வோங்.