ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் மாணவர் ஒருவர் கொலையுண்டதைத் தொடர்ந்து அப்பள்ளிக்குச் சென்ற கல்வி அமைச்சர் சான் சுன் சிங், பள்ளியின் முதல்வரும் ஆசிரியர்களும் தங்களது அதிர்ச்சியையும் வேதனையையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மாணவர்களை அக்கறையுடன் பார்த்துக் கொண்டதைக் கண்டு தாம் அதிர்ந்துபோனதாகக் குறிப்பிட்டார்.
போலிஸ் விசாரணைக்காக மாணவர்கள் சிலர் காத்து இருந்ததைக் கண்டதும், அவர்களுடன் பேசுவதற்காகத் தாம் நின்றதாக திரு சான் சொன்னார். அவர்களில் இருவர், கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள உயர்நிலை 4 மாணவரின் வகுப்புத் தோழர்கள்.
‘எங்களின் நண்பனுக்கு உதவுங்கள் அமைச்சரே! அவனைப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று அவர்கள் தம்மிடம் சொன்னதாக திரு சான் கூறினார்.
அந்த இறுக்கமான வேளையிலும் அப்பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள், முதல்வர் ஆகியோரிடத்தில் கருணையை, இரக்கத்தை, ஒற்றுமையைத் தாம் கண்டதாக அமைச்சர் சான் நாடாளுமன்றத்தில் இன்று குறிப்பிட்டார்.