ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளில் குறைபாடுகள் இருந்ததாகக் குறிப்பிட்ட நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, துறைமுகம் மீண்டும் திறப்பதற்குள் இக்குறைபாடுகள் சரிசெய்யப்படும் என்று நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கிருமித்தொற்று எவ்வாறு பரவியது என்பது குறித்து சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ஆரம்பக்கட்ட ஆய்வில் சில குறைபாடுகள் தெரியவந்துள்ளன.
உதாரணத்திற்கு அவ்விடத்தில் ஊழியர்களால் நீண்ட நேரம் முகக்கவசம் அணிந்து வேலை பார்ப்பது சிரமம். கிட்டத்தட்ட 120 கிலோ எடை வரையிலான மீன்கள், பனிக்கட்டிகள் நிறைந்த பெட்டிகளை அவர்கள் இங்குமங்குமாக நகர்த்த வேண்டியிருக்கும்.
இதனால் முகக்கவசத்தை அகற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி ஜூரோங் மீன்பிடித் துறைமுகம் மீண்டும் திறக்கப்படவுள்ளது. அதற்குள் இதுபோன்ற குறைபாடுகள் களையப்படும் என்று உறுதியளித்தார் திருவாட்டி ஃபூ.