ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் நிகழ்ந்த கொலைக்குப் பிறகு அங்குள்ள 540 ஆசிரியர்களும் மாணவர்களும் மனநல உதவி கோரியதாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
மனநல முதலுதவி, அதிர்ச்சியைச் சமாளித்தல் ஆகியவற்றில் பயிற்சிபெற்ற கல்வி அமைச்சின் 98 நிபுணர்கள் பள்ளிக்கு கூடுதல் உதவி அளித்தனர்.
அத்துடன், சம்பவம் நிகழ்ந்த மறுநாளன்று உடனடி உதவி நாடி பள்ளிக்கு வரும் ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவ 'கேர்' எனும் அவசர மனநல உதவி நிலையம் அமைக்கப்பட்டது.
அந்நிகழ்வு ரிவர் வேலி உயர் நிலைப் பள்ளியைத் தாண்டி வெளியிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் ஜூலை 20ஆம் தேதி, தாமும் கல்வி அமைச்சின் முக்கிய அதிகாரிகள் சிலரும் தொடக்கப் பள்ளிகள் முதல் தொடக்கக் கல்லூரிகள் வரையிலான 350 பள்ளிகளின் முதல்வர்களைச் சந்தித்ததாக திரு சான் கூறினார்.
மனஅழுத்தத்தோடு காணப்படும் மாணவர்களும் ஊழியர் களும் தேவையான வளங்களைப் பெறுவதற்கான வழிகள் அவர்களுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
21ஆம் தேதி பள்ளி மீண்டும் திறந்தபோது, பள்ளிக்கு வராத மாணவர்களை ஆசிரியர்கள் தொடர்புகொண்டு நலம் விசாரித்தனர்.
தேவையானவர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டது. தங்களது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும்படி பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்குவித்தனர்.
"முக்கியமாக, மாணவர்கள் முன்வந்து சிறிய செயல்கள் மூலம் பரிவைக் காட்டியது, மகிழ்ச்சி அளித்தது," என்றார் திரு சான்.
அத்துடன், பள்ளி ஆலோசனைக் குழு, பெற்றோர், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் பள்ளிக்கு ஆதரவு அளித்ததாக அவர் கூறினார்.

