ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் மாணவர் கொலையுண்டது போன்ற துயர நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க பரந்த சமூக அளவிலான முயற்சி தேவைப்படுகிறது என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.
அனைவர்க்குமான, குறிப்பாக இளையர்களுக்கான சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பு தேவைப்படுவதாக திரு சான் குறிப்பிட்டார். முதற்கட்டமாக, தங்களது சமுதாய வட்டங்களுக்குள் உதவி தேவைப்படுவோரை அடையாளம் கண்டு, உதவும்படி பொதுமக்களை அவர் ஊக்குவித்துள்ளார்.
"உதவிக்கரம் நீட்டுவது வலிமைக்கான அறிகுறிதானே ஒழிய, அது பலவீனமல்ல," என்றார் அமைச்சர்.
மாணவர்கள், பணியாளர்கள், பெற்றோர் அல்லது குடும்பத்தினர் என உதவி கோரி எவர் வந்தாலும் அவர்களை இகழ வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"இந்த நிகழ்வின்மூலம், நமது தடைகளை அகற்றவும் தடுமாறுவோரில் உதவி கோரி முன்வருவோரை அக்கறையுடனும் கருணையுடனும் நடத்தவும் நம்மை நாமே ஊக்குவித்துக் கொள்வோம்," என்று திரு சான் கூறினார்.
பிள்ளைகளின் எண்ணங்களை, உணர்வுகளைச் செவிமடுக்க கூடுதல் நேரம் ஒதுக்குமாறும், அவர்கள் தங்களுக்கு எது அழுத்தம் தருகிறது என்பதையும் தங்களது உணர்ச்சிகளைகயும் பகிர்ந்துகொள்வதற்கான வெளியை ஏற்படுத்தித் தருமாறும் குடும்பங்களை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒரு பெற்றோராகத் தமது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட அவர், "வெற்றியை வரையறுக்க, நம் பிள்ளைகளுடனும் குடும்பத்தினருடனும் மிக வெளிப்படையான உரையாடல்களைக் கொண்டிருக்க வேண்டும்.குழந்தைகள் தங்களது ஆற்றலை உணர்ந்துகொள்ளச் செய்யவும் அவர்களின் திறன்களை வளர்க்கவும் அவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கவும் உதவுவதன் மூலமே வெற்றியை வரையறை செய்ய வேண்டும் என்பதை ஒரு பெற்றோராக நான் உணர்ந்துள்ளேன்," என்றார்.
தங்களுக்கான வழியைக் கண்டறிவதற்கான நம்பிக்கையை அளிப்பதுதான் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் தரும் ஆகச் சிறந்த உறுதிமொழியாக இருக்கும் என்று திரு சான் குறிப்பிட்டார்.
மற்றவர்களுக்காக எழுந்து நின்று, கனிவுடனும் கருணையுடனும் அணுகுவதன்மூலம் எதிர்மறைத்தன்மையின் தீய சுழற்சிகளைத் தகர்க்கும்படி பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"இணையத்தில் நஞ்சை விதைக்கும் உரையாடல்களை நிறுத்தி, வலிமையை, அக்கறையை, நேர்மறைத்தன்மையைப் பரப்பும் செய்திகளை நமது இணையத் தொடர்புகள்மூலம் பெருக்க வேண்டும்," என்றார் அவர்.
பெற்றோர் ஆதரவுக் குழுக்கள் மூலமாக பெற்றோர்களுடனான பங்காளித்துவத்தைக் கல்வி அமைச்சு வலுப்படுத்தும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், மாணவர்களின், குடும்பத்தினரின் மனநலன்மீது கவனம் செலுத்த அக்குழுக்களுக்குள் கிளைக்குழுக்களை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் சொன்னார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உட்பட பள்ளிச் சமூகத்திற்கு ஆதரவு வழங்குவதைக் கல்வி அமைச்சு தொடரும். மற்ற பள்ளி மாணவர்களின் நல்வாழ்வையும் அமைச்சு தொடர்ந்து கண்காணிக்கும்.
மனநல, நல்வாழ்வுப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு திட்டத்தைத் தீட்டுவதற்காக சுகாதார அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் இணைந்து ஒரு பணிக்குழுவை ஏற்படுத்தி இருப்பதாகவும் அமைச்சர் சான் கூறினார்.

