சிங்கப்பூரின் உணவு விநியோகத் தொடரில் தடை ஏற்படின், தற்காலிக மாற்று விநியோகத் தளமாக முன்னாள் பாசிர் பாஞ்சாங் விநியோக நிலையம் அமையலாம்.
தற்போது 151 பாசிர் பாஞ்சாங் ரோட்டில் காலியாக இருக்கும் அந்த இடத்துக்கு நேற்று சென்றிருந்த நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ இதனை அறிவித்தார்.
நாட்டில் ஆங்காங்கே உருவாகி வரும் கொவிட்-19 கிருமித்தொற்றுக் குழுமங்களால் சிங்கப்பூரின் மீன்பிடித் துறைமுகங்கள், விநியோக நிலையங்களின் செயல்பாடுகளில் தற்காலிகத் தடைகள் ஏற்படும் நிலையை அவர் சுட்டினார். ஜூரோங் மீன்பிடித் துறைமுகமும் இந்தக் காரணத்தினால் இம்மாதம் 17ஆம் தேதியன்று மூடப்பட வேண்டியிருந்தது. அதையடுத்து மக்கள் ஈரச்சந்தைகளுக்கு விரைந்து, அங்கிருந்த மீன்களை வாரிக்கொண்டனர். மீன் கடைகளில் மீன்கள் விரைவில் விற்றுத் தீர்ந்து கடைகள் வழக்கத்தைவிட முன்னதாகவே மூடிவிட்டன.
"நம் உணவு விநியோகத் தொடரில், நமது மீன்பிடித் துறைமுகங்களும் பாசிர் பாஞ்சாங் மொத்த வியாபார நிலையமும் முக்கிய மையங்களாகும். மீனுக்கு மீன்பிடித் துறைமுகங்களும் காய்கறி, பழங்களுக்கு பாசிர் பாஞ்சாங் மொத்த வியாபார நிலையமும் உள்ளன," என்று குறிப்பிட்டார் அமைச்சர் ஃபூ. மிகக் குறுகிய காலத்தில் உடனடியாகப் பயன்படுத்தப்படும் வசதியாக, தற்போது காலியாக உள்ள முன்னாள் பாசிர் பாஞ்சாங் விநியோக நிலையம் உள்ளது என சிங்கப்பூர் உணவு அமைப்பு குறிப்பிட்டுள்ளதையும் பகிர்ந்துகொண்டார்.
காலி இடத்தில் அமைந்துள்ள கிடங்கில் பொருட்களை ஏற்றவும் இறக்கவும் இடவசதி உள்ளது. அதனால் தளவாட நடவடிக்கைகளுக்கு அவ்விடம் ஏற்றது. மேலும் பெரிய அளவிலான வாகன நிறுத்துமிடங்களும் கிடங்கைச் சுற்றி உள்ளன. ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்துக்கு ஒப்ப, கிட்டத்தட்ட ஏழு காற்பந்துத் திடல்களுக்குச் சமமாக அந்த காலி இடம் விளங்குகிறது.
"கிருமித்தொற்றுச் சம்பவங்களும் தனிமை உத்தரவுகளும் நம் விநியோகத் தொடர் நடவடிக்கைகளைப் பாதித்தாலும் நமது விநியோகத் தொடர், மீள்திறனுடன் செயல்படுவதை இது உறுதிசெய்யும். உணவுத் துறைக்கு ஆதரவளிக்க நாங்கள் எந்நேரமும் தயார். சிங்கப்பூரர்களின் தேவைகளைத் தொடர்ந்து உணவு விநியோகம் வழி எங்களால் பூர்த்தி செய்யமுடியும்," என்றார் திருவாட்டி ஃபூ.

