கையூட்டுக் குற்றம் தொடர்பில் மனிதவள அமைச்சு, 2016க்கும் 2020க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 960 சம்பவங்களை விசாரித்ததாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவங்களில் மூன்றில் இரு பங்கு, வெளிநாட்டு ஊழியர்கள் புகார் அளித்தவை என்றும் எஞ்சியவற்றைப் பொதுமக்கள் அல்லது அரசாங்க சார்பற்ற அமைப்புகள், அரசாங்க அமைப்புகள் போன்றவை புகார் அளித்தவை என்றும் டாக்டர் டான் கூறினார்.
தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையில் மனிதவள அமைச்சு சுயமாக மேற்கொண்ட கண்காணிப்புப் பணிகளின்போது ஒரு சில சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. வேலை பெற உதவுவதாகக் கூறி, ஊழியர்களிடமிருந்து கையூட்டுப் பெறப்பட்ட குற்றம் புரியப்பட்டது.
ஓர் ஆண்டில் செய்யப்படும் புகார்களில் இத்தகைய கையூட்டு தொடர்பானவை 10% என்று டாக்டர் டான் குறிப்பிட்டார். நீ சூன் குழுத்தொகுதியின் திரு லூயிஸ் இங் கேட்ட கேள்விக்கு டாக்டர் டான் இவ்வாறு பதிலளித்தார்.
"தங்களின் முதலாளிகள் பழிவாங்குவார்கள் என்று அஞ்சாமல் உடனே இதுபோன்ற கையூட்டுக் குற்றங்கள் குறித்து ஊழியர்கள் புகார் அளிக்க முன்வருவதை மனிதவள அமைச்சு ஊக்குவிக்க, அவர்களுக்கு வேறு இடத்தில் வேலை தேடி தரும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும்," என்றார் அவர்.
கையூட்டு என்றால் என்ன, நடைமுறையில் உள்ள ஊழியர் பாதுகாப்பு, கடும் தண்டனை மூலம் முதலாளிகள் குற்றம் புரிவதைத் தடுத்தல் போன்றவற்றை ஊழியர்களுக்கு உணர்த்துவது அரசாங்க அணுகுமுறை என்றார் அவர்.

