ஏற்கனவே பல முறை சிறை சென்றுள்ள முதியவர் மேலும் இருவரை மானபங்கம் செய்ததை அடுத்து மீண்டும் சிறைக்குச் சென்றுள்ளார். மானபங்கம் செய்யப்பட்டோரில் ஒருவர் 11 வயது சிறுமி.
காது கேட்க சிரமப்படும் போ செங் கியெனுக்கு, 86, இதே போன்ற குற்றத்திற்காக கடந்த ஆண்டு 18 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறை சென்றும் தவற்றை உணராத அவர், தம் மீது சுமத்தப்பட்ட இரண்டு மானபங்கக் குற்றச்சாட்டுக்களை இன்று ஒப்புக்கொண்டார்..
அவருக்குப் பத்துமாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எந்த வழக்கறிஞரின் பிரதிநிதிப்புமில்லாமல் இருந்த போ, “எனக்கு வயதாகிவிட்டது. நான் இறக்கும் தறுவாயில் இருக்கிறேன்,” எனக் கூறி சிறைத்தண்டனைக்குப் பதிலாக தமக்கு அபராதம் விதிக்கும்படி நீதிமன்றத்திடம் கேட்டார்.
கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் பேருந்து சேவை எண் 30ல் அமர்ந்திருந்தபோது பக்கத்தில் நின்றுகொண்டிருந்த 27 வயது பெண்ணை அந்த முதியவர் குறி வைத்தார். அவர் அந்தப் பெண்ணின் கரத்தை ஐந்து முறை தொட்டபிறகு, கை தெரியாமல் பட்டிருக்கும் என ஆரம்பத்தில் நினைத்தார். பிறகு எழுந்து நின்றபோ, விழுவது போல நடித்து அந்தப் பெண்ணின் தொடையைப் பற்றிக்கொண்டார். அந்தப் பெண் பிறகு போலீசில் புகார் செய்தார்.
மார் 11ஆம் தேதி பிற்பகல் 2.20 மணியளவில் போ, 98 சேவை எண் கொண்டுள்ள பேருந்து ஒன்றில் ஏறி 11 வயது சிறுமியின் பக்கத்தில் அமர்ந்தார். போ, தனது ஊன்றுகோல் பிடியை அந்தச் சிறுமியின் மடியில் வைத்து அவளை மானபங்கப்படுத்தினார். அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி, அவரிடமிருந்து தப்பித்து பின்னர் தமது தாயாரிடம் நடந்தவற்றைக் கூறினார்.
ஐம்பது வயதுக்கு மேற்பட்டோருக்கு பிரம்படி விதிக்கப்பட முடியாது.