கேடிவி கேளிக்கைக் கூடங்கள் தொடர்பில் உருவாகியுள்ள கொவிட்-19 கிருமித்தொற்றுக் குழுமத்தில் 50க்குக் குறைவான வெளிநாட்டு உபசரிப்புப் பெண்கள் உள்ளனர். அவர்களின் வேலை அனுமதி அட்டை கடந்த ஆண்டுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டவை என்றும் அவை செல்லுபடியாகக்கூடியவை என்றும் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
வேலை அனுமதி அட்டையை வைத்திருக்கும் இக்குறிப்பிட்ட பிரிவினர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உபசரிப்புப் பணி அல்லாத வேறு வேலைகளைச் செய்ய அனுமதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் விளக்கினார். அவர்களின் முதலாளிகள் தற்காலிகமாக உணவு, பானம் போன்ற வேறு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு வேலை செய்துவந்த இப்பிரிவினருக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டது.
"வேலை அனுமதி அட்டை வைத்திருப்போரைச் செயல்பாட்டு நிர்வாகிகள், உணவு பரிமாறுவோர் போன்ற வேறு வேலைகளிலும் இரவுக் கேளிக்கை விடுதிகள் அமர்த்துவதுண்டு. கொவிட்-19க்கு முந்திய காலத்தில்கூட அவர்கள் உபசரிப்புப் பெண்களாக வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை," என்றார் டாக்டர் டான்.
சுவா சூ காங் குழுத்தொகுதியைச் சேர்ந்த திரு டோன் வீ கேட்டிருந்த நாடாளுமன்றக் கேள்விக்கு டாக்டர் டான் எழுத்துபூர்வமாக இவ்வாறு பதிலளித்திருந்தார்.
சமூக வருகை அனுமதி அட்டையைக் கொண்டு சிங்கப்பூருக்கு வந்திருந்தவர்கள் இவ்வாறு உபசரிப்புப் பெண்களாக வேலை செய்வது குடிநுழைவுச் சட்டத்தின்கீழ் குற்றமாகும் என்று தெரிவித்த டாக்டர் டான், கேடிவி கிருமிக் குழுமத்தில் அத்தகைய பிரிவினர் உள்ளனரா என்பதைக் குறிப்பிடவில்லை. போலிசாரும் வெவ்வேறு அரசாங்க அமைப்புகளும் விதிமீறும் இரவு கேளிக்கைக் கூடங்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. நிரந்தரமாக உரிமத்தை ரத்து செய்வது அதில் ஒன்று என்று டாக்டர் டான் குறிப்பிட்டார்.
இரவு கேளிக்கை விடுதிகளில் சுயமாகக் கண்காணிப்புப் பணிகளை மனிதவள அமைச்சு மேற்கொள்வதில்லை என்றார் அமைச்சர். இருப்பினும், அனுமதிக்கப்படாத நடவடிக்கைகளில் வேலை அனுமதி அட்டை வைத்திருப்போர் ஈடுபட்டால் வேலை அனுமதி அட்டை விதிமுறைகளின்கீழ் மனிதவள அமைச்சு அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அமைச்சர் டான் விவரித்தார்.