இரண்டு வயதுக்குக் குறைவான பத்தில் ஒன்பது குழந்தைகள், தினமும் பெரியவர்கள் கண்காணிப்பின்றி கணினித் திரைகளைப் பார்க்கும்போது, நாளடைவில் மொழித் தடை, கவனம் செலுத்த இயலாமை போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
கையடக்கக் கணினி, திறன்பேசி போன்ற மின்சாதனங்களின் திரைகளை ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே பிள்ளைகள் பார்க்கத் தொடங்கிவிடுகின்றனர். அவர்கள் அழாமல் இருக்க ஆறுதல் அளிக்கும் வகையில் பெற்றோர் சிலரும் சாதனங்களைக் கையில் கொடுத்துவிடுகின்றனர். இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வு மூலம், இத்தகைய மின்சாதனங்களின் திரையை நீண்ட நேரம் பார்ப்பதால் வளர்ச்சிக் குறைபாடுகள் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. உடல் பருமன், மனநல பாதிப்பு ஆகிய சிக்கல்களும் ஏற்படும் சாத்தியமுண்டு.

