ஜெர்மானிய நிறுவனமான 'போஷ்', அதன் தென்கிழக்காசிய புத்தாக்க மையத்தை சிங்கப்பூரில் திறந்துள்ளது. இதன்வழி புதிய நிறுவனங்களுக்கு வட்டார ஒத்துழைப்புக் கட்டமைப்பு ஒன்று உருவாகும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது.
நிறுவனத்தின் 'குரோ' என்ற இந்த புத்தாக்கத் தளம், சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் (இடிபி) கீழ் இயங்கும் 'நியூ வென்ச்சர்ஸ்' பிரிவின் கூட்டணியில் அமைக்கப்பட்டது.
புத்தாக்க மையம் நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டுக்குள் குறைந்தது ஐந்து புத்தாக்கத் திட்டங்களை மையம் தொடங்கி வைக்கும் என்று கூறப்படுகிறது.
'குரோ' திட்டத்தின்கீழ் 'போஷ்' அதன் முதல் நீர்வாழ் உயிர் வளர்ப்பியல் நிறுவனத்தையும் துவங்குவதாக அறிவித்தது. 'எக்குவயீசி' என்ற அப்புதிய நிறுவனம், 'போஷ்' மற்றும் இடிபியிடமிருந்து பல மில்லியன் மதிப்பிலான நிதியைப் பெற்றுள்ளதாக அறியப்படுகிறது.
நீர்வாழ் உயிர்களை வளர்க்கும் பண்ணையை உருவாக்க வேண்டும் என்ற 'எக்குவயீசி'யின் திட்டத்திற்கு 'போஷ்' நிறுவனத்தின் உணரி உருவாக்க ஆற்றல்கள் கைகொடுத்துள்ளன. இதில் உணரிகள், மென்பொருள், பகுப்பாய்வு ஆகியவை பண்ணை விளைச்சலையும் முன்கணிப்பையும் மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
நீரின் தரம், இறால்களுக்குப் போதுமான உணவு போன்றவற்றை அறிய உதவும் திட்டம், சிங்கப்பூர் மட்டுமன்றி இந்தோனீசியா, வியட்னாம் நாடுகளின் பண்ணைகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த எண்ணியுள்ளதாக எக்குவயீசி இணை நிறுவனர் ஐவன் டே தெரிவித்தார்.
'குரோ' திட்டத்தின்கீழ் கிட்டத்தட்ட 30 புத்தாக்க தொழில் முனைவர்கள் வெவ்வேறு புதிய பணித்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
'குரோ' தொடக்க நிகழ்வுக்கு துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் வருகை அளித்திருந்தார்.

