நான்கு அனைத்துலக நிறுவனங்கள் இங்கு தளம் அமைக்கின்றன
சிங்கப்பூரில் பொங்கோல் மின்னி
லக்க வட்டாரத்தில் தளம் அமைப்பதற்கான தங்கள் திட்டங்களை நான்கு அனைத்துலக நிறுவனங்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. இதன் மூலம் 2,000 தொழில்நுட்ப வேலைகள் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த நான்கு நிறுவனங்களும் வெவ்வேறான ஆற்றல்களை இங்கு கொணரும் என்று வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங் நேற்று தெரிவித்தார்.
டெல்ட்ரா எலக்ட்ரானிக்ஸ் இண்ட்' 1 (சிங்கப்பூர்), போஸ்டன் டைனமிக்ஸ், குரூப்-1பி, வான்சியாங் ஆகியவை அந்த நான்கு நிறுவனங்கள்.
பொங்கோல் மின்னிலக்க வட்டார இடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர், புத்தாக்கம், தொழில், ஆற்றல் ஆகியவற்றுக்கான உலக மையமாக சிங்கப்பூர் திகழ்வதைச் சுட்டினார். இதன்மூலம் அந்த நிறுவனங்கள் பலன் அடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல் சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் கூறினார்.
பொங்கோலில் 50 ஹெக்டர் நிலப்பரப்பில் மின்னிலக்க வட்டாரம் ஒன்றை உருவாக்குவதற்கான அடிப்படை திட்டம் பற்றி 2018ல் அறிவிக்கப்பட்டது. அந்த வட்டாரம் 2024 முதல் படிப்படியாகத் திறக்கப்படும்.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகமும் அந்த வட்டாரத்தில் அமையும்.
இந்த வளாகம் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், 500 ஊழியர்களுக்குச் சேவையாற்றும். நிறுவனங்களுக்கும் மாணவர்கள், பொதுமக்களுக்கும் உயிரோட்டமிக்க மையமாகவும் பொங்கோல் மின்னிலக்க வட்டாரம் திகழும்.
அங்கு அவர்கள் மின்னிலக்க மற்றும் விவேக வாழ்வுக்கான தீர்வுகளைப் பரிசோதித்துப் பார்க்கலாம்.
சிங்கப்பூரின் அறிவார்ந்த நாடு மற்றும் மின்னிலக்கப் பொருளியல் திட்டங்களையொட்டி, பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்திற்கு ஜூரோங் நகராண்மைக் கழகம் திட்டமிட்டது.

