கொவிட்-19க்கு எதிரான 'சினோஃபார்ம்' தடுப்பூசியை சிங்கப்பூரில் கூடியவிரைவில் போட்டுக்கொள்ளலாம். பல தனியார் சுகாதார பராமரிப்பு நிலையங்கள் அந்தத் தடுப்பூசி மருந்தைப் பெறுவதற்கு ஏற்கெனவே முயற்சி எடுத்துள்ளன.
இந்த ஊசி மருந்தையும் சேர்த்து சிங்கப்பூரில் கொரோனாவுக்கு எதிராக மொத்தம் நான்கு தடுப்பூசி மருந்துகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
கொவிட்-19 காரணமாக நடப்பில் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தி பொருளியலை மறுபடியும் வழக்க நிலைக்குக் கொண்டுவர விரும்பும் சிங்கப்பூர், தடுப்பூசி இயக்கத்தை வேகப்படுத்தி வருகிறது.
'சிறப்பு வழி ஏற்பாட்டின்' கீழ் சினோஃபார்ம் மருந்தை இறக்குமதி செய்ய ஐஎச்எச் ஹெல்த்கேர் சிங்கப்பூர் அமைப்பிற்குச் சுகாதார அறிவியல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி இருக்கிறது.
அந்த அமைப்பு இதைத் தெரி வித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இதன்மூலம் சிங்கப்பூரர்களுக்கு மேலும் ஒரு தடுப்பூசி வாய்ப்பு கிடைக்கும் என்று அந்த அமைப்பின் செயலாக்கத் துறை தலைமை அதிகாரி டாக்டர் நோவல் இயோ கூறினார். மேலும் தகவல்கள் கிடைக்கும்போது அவற்றை வெளியிடப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, சினோஃபார்ம் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள விரும்பும் மக்கள் தங்களைப் பதிந்துகொள்ளலாம் என்று ராஃபிள்ஸ் மருத்துவக் குழுமம் ஃபேஸ்புக் மூலம் அறிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம், அவசர பயனீட்டுப் பட்டியலில் அனுமதித்துள்ள கொவிட்-19 தடுப்பூசி மருந்தை தனியார் சுகாதார பராமரிப்பு நிறுவனங்கள் இங்கு கொண்டு வர, அந்தச் சிறப்பு வழி ஏற்பாடு அனுமதிக்கிறது.
சீனாவின் சினோவேக், சினோஃபார்ம் ஆகியவையும் ஜான்சன்& ஜான்சன், ஆக்ஸ்போர்ட்- ஆஸ்ட்ரா ஸெனிகா ஆகியவையும் அந்த உலக நிறுவனப் பட்டியலில் இடம்பெற்று இருக்கின்றன.
இவை ஒருபுறம் இருக்க, நொவாவேக்ஸ் என்ற அமெரிக்காவின் உயிரியல் தொழில்நட்ப நிறுவனத்துடன் கொள்முதல் உடன்பாடுகளில் முன்னதாகவே அதிகாரிகள் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.
இந்த நிறுவனத்தின் தடுப்பூசி மருந்து அநேகமாக இந்த ஆண்டின் இறுதிக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மருந்து அங்கீகரிக்கப்பட்டால் இது தேசிய தடுப்பூசித் திட்டத்தில் இடம்பெறும். சிறப்பு வழி மூலம் அனுமதிக்கப்படும் தடுப்பூசி மருந்துக்கு அரசாங்க மானியம் கிடைக்காது.
தடுப்பூசி பாதிப்பு நிதி உதவி செயல்திட்டத்தில் அவை இடம்பெற மாட்டா.