சிங்கப்பூரில் ஜூரோங் மீன்பிடித் துறைமுக தொற்றுக் குழுமம் தலைகாட்டியதை அடுத்து அதிகாரிகள் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினார்கள். இல்லை எனில் இன்று நிலைமை மேலும் மோசமடைந்து இருக்கும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் மறுபடியும் கடுமையாக்கப்பட்டது பற்றி நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பலரும் செவ்வாய்க்கிழமை அதிகமான கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்குப் பதில் அளித்த அமைச்சர், கட்டுப்பாடு களைக் கடுமையாக்கியது சரியானது என்று முழுக்க முழுக்க தான் கருதுவதாகக் கூறினார்.
கேடிவி பொழுதுபோக்குக் கூடங்கள் தொடர்பான கொவிட்-19 தொற்று எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 245 ஆக இருந்ததை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில், ஜூரோங் துறைமுகத் தொற்றுக் குழுமத்தில் பாதிக்கப்பட்டோர் ஏறக்குறைய 900 பேராக இருந்ததையும் அவர் குறிப்பிட்டார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர்வாயு சிகிச்சை அல்லது தீவிர கண்காணிப்பு தேவைப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து மூன்றரை மடங்கு அதிகமாகி இருப்பதையும் திரு வோங் சுட்டிக்காட்டினார். கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கவில்லை என்றால் நிலைமை இன்னும் மோசமடைந்து இருக்கும் என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரில் இன்னமும் 200,000 முதியவர்கள் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.
இவர்களில் பலரும் நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தழுவக்கூடிய ஒரு நிலையைச் சந்திக்க நாம் தயாரா என்று கேட்ட அமைச்சர், சிங்கப்பூரில் இதைக் காணவா நாம் விரும்புகிறோம் என்றும் வினவினார்.
வருங்காலத்தில் தெள்ளத்தெளிவாக வழிகாட்டி ஏற்பாடுகள் தேவை என்று சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களுக்குப் பதில் அளித்த கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு இணைத் தலைவர்களில் ஒருவரான திரு வோங், தொற்று சூழ் நிலை கணிக்க முடியாத அளவுக்கு ஏற்ற இறக்கமாக இருக்கிறது, திடீர் திடீர் என்று மாறுகிறது, மிகவும் நிச்சயமில்லாமல் இருக்கிறது என்று விளக்கினார்.
அடுத்ததாக என்ன நிகழும் என்பதைக் கணிக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடும் கட்டுப்பாடுகள் காரணமாக ஒவ்வொருவரும் சலிப்படைந்து விட்டனர் என்பதை தான் முற்றிலும் புரிந்துகொள்வதாகத் தெரிவித்த அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதைப் புரிந்துகொள்வார்கள் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.