மானபங்க வழக்குகளில் 2018ல் அடிக்கடி சிறைக்குச் சென்று திரும்பிய சக்கர நாற்காலி முதியவர் மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டார். இம்முறை 11 வயது சிறுமி உட்பட இருவரை அவர் மானபங்கப்படுத்தினார்.
சிங்கப்பூரரான போ செங் கியானுக்கு வயது 86. சரிவர காது கேட்காது. இந்த நிலையில் மானபங்கக் குற்றச்செயல்களில் ஈடு பட்ட அவருக்கு கடந்த ஆண்டு 18 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதை அனுப வித்தும் பாடம் கற்றுக்கொள்ளாத அவர், மீண்டும் இருவரை மானபங்கப்படுத்தியுள்ளார்.
நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் அவர் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார். நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யாரும் அவரைப் பிரதி நிதிக்கவில்லை.
தமக்கு வயதாகிவிட்டதாகவும் இறக்கும் தறுவாயில் இருப்பதாலும் சிறைத் தண்டனைக்குப் பதிலாக அபராதம் விதிக்க வேண்டும் என்று திரு போ கேட்டுக் கொண்டார்.
ஆனால் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதி, போவை பத்து மாதம் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி பேருந்துச் சேவை எண் 30ல் பயணம் செய்த அவர், இருக்கையில் அமர்ந்து தமக்கு அருகில் நின்றுகொண்டிருந்த 27 வயது பெண்ணின் முழங்கையை உரசினார்.
பின்னர் அந்தப் பெண்ணுக்கு அருகே சிறிய படிக்கட்டில் நின்றுகொண்டு, தவறி மேலே விழுவதைப் போல நடித்து அந்தப் பெண்ணின் தொடையைத் தொட்டார். இதையடுத்து அந்தப்பெண் போலிசில் புகார் செய்தார்.
மார்ச் 11ஆம் தேதி நடந்த மற்றொரு சம்பவத்தில் பேருந்து சேவை எண் 98ல் ஏறி 11 வயது சிறுமியின் பக்கத்தில் அமர்ந்தார்.
பின்னர் கைத்தடியை சிறுமியின் மடியில் வைத்து மானபங்கப்படுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கைத்தடியைத் தள்ளிவிட்டார்.
வீட்டுக்குச் சென்று பேருந்தில் நடந்ததை தாயாரிடம் சிறுமி கூறியதால் போ மீது ஜூரோங் போலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.