அண்மையில் தனது மின்சார கார் பகிர்வு நிறுவனத்தை விற்ற புளுஎஸ்ஜி, தனது ஆகப்பெரிய மின்னேற்றி கட்டமைப்பையும் விற்க முன்வந்துள்ளது.
புளுஎஸ்ஜி நிறுவனத்தை நடத்தும் பிரஞ்சு பொறியியல் குழுமமான போலோர், பிரஞ்சு எண்ணெய் நிறுவனமான 'டோட்டல்' நிறுவனத்துக்கு மின்னேற்றி கட்டமைப்பை விற்கப்போவதாக தெரிவித்தது.
இதனை புளுஎஸ்ஜியின் தலைமை நிர்வாகி ஃபிராங்க் விட்டே நேற்று உறுதி செய்தார்.
ஆனால் விற்பனை விவரங்களை அவர் வெளியிடவில்லை.
புளுஎஸ்ஜி, சிங்கப்பூர் முழுவதும் 1,500 மின்னேற்றி நிலையங்களை வைத்துள்ளது. இது, சிங்கப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்று வைத்திருக்கும் ஆகப்பெரிய மின்னேற்றி கட்டமைப்பாகும்.
நிலப்போக்குவரத்து ஆணையத்தின் சலுகையின் கீழ் அந்தக் கட்டமைப்பை புளுஎஸ்ஜி நடத்திவந்தது.
இது பற்றி கருத்து அறிய முயற்சி செய்தபோது டோட்டல் நிறுவனத்துடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
தற்போது ஷெல் மற்றும் கால்டெக்ஸ் நிறுவனங்கள் சிங்கப்பூரில் குறிப்பிட்ட இடங்களில் மின்னேற்றும் சேவையை வழங்கி வருகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் புளுஎஸ்ஜி தனது கார்ப் பகிர்வு சேவை நிறுவனத்தை உள்ளூர் நிறுவனமான கோல்பெல்லுக்கு விற்கப் போவதாக அறிவித்தது. இந்த விற்பனை ஆகஸ்டு மாதம் நிறைவேறவிருக்கிறது.

