வேலை நண்பர்கள் சிலரால் ஆங்கிலத்தில் இருந்த கட்டளைகளைப் புரிந்துகொள்ள முடியாததைக் கண்டார் திரு சின்னையா பிரபு. 'ஆர்சிவய்' என்ற பொறியில் ஆலோசனை நிறுவனத்தில் உதவிப் பாதுகாப்பு மேலாளராகப் பணிபுரியும் திரு சின்னையா பிரபு, சிரமப்படும் இப்பிரிவினருக்கு உதவ வேண்டும் என்று முடிவெடுத்தார்.
வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத் தகவல்கள் போன்றவற்றை அவரவர் தாய்மொழியில் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இவர் நூலகங்களைத் துவங்கினார்.
முக்கியமான வேலையிட அம்சங்கள் குறித்து அவரின் வேலை நண்பர்களால் தங்களின் அறிவைப் பெருக்கிக்கொள்ள முடிந்ததுடன் நூலகங்களில் அவர்களால் ஓய்வாக படித்துப் பொழுதைக் கழிக்கவும் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டன.
தமது முயற்சிக்காக 36 வயது திரு சின்னையா பிரபுவுக்கு இன்று 'பிஸ்சேஃப் செம்பியன்' விருது வழங்கப்பட்டது. ஒரு நிறுவனத்தின் ஆபத்து நிர்வாக ஆற்றலை அதிகப்படுத்தும் நபர்களுக்கு இவ்விருது வழங்கப்படும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நூலக யோசனை தமக்குத் தோன்றியதாகப் பகிர்ந்துகொண்ட திரு சின்னையா பிரபு, பாதுகாப்பு, சுகாதாரத் தரத்தை நிறுவனத்தில் தக்கவைத்திட மேலும் பல புத்தாக்க வழிகளைத் தாம் கண்டறிய இவ்விருது தமக்கு உந்துதலாக இருப்பதாக திரு சின்னையா பிரபு தெரிவித்தார்.

