முதலாளிகளும் ஊழியர்களும் தங்களின் வேலையிடப் பாதுகாப்பையும் சுகாதார நலத் திட்டங்களையும் மேம்படுத்துவது அவசியம் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார். ஊழியர்கள் காயமடைவதும் அவர்களுக்கு உயிரிழப்பு நேர்வதும் கொவிட்-19 தாக்கத்திலிருந்து நிறுவனங்கள் மீண்டுவருவதற்குத் தடையாக இருக்கும் என்றார் அவர்.
வேலையிடத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்கு மேல், நிறுவனங்கள் தங்களின் வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார நலத் திட்டங்களைக் கொள்ளைநோய்க்கு இடையேயும் தொடர வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். அப்போதுதான் வேலையிடங்களில் கலந்துறவாடல்களைக் கட்டுப்படுத்தவும் ஊழியர்களிடையே கொவிட்-19 பரவுவதைத் தடுக்கவும் முடியும் என்றார் அவர்.
"நிறுவனங்கள் இயங்கவும் வெற்றிபெறவும் நம் ஊழியர்களிடத்தில் பரிவு காட்டுவது முக்கியம்," என்றார் டாக்டர் டான்.
அதற்காக கிருமித்தொற்றிலிருந்து பாதுகாப்பது போதாது என்றும் வேலையிட விபத்துகளிலிருந்து பாதுகாத்தல் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொதுப் பிரிவு சார்ந்த கட்டுமானத் திட்டங்களுக்குத் தகுதிபெற, பாதுகாப்பு நிபந்தனைகளை அறிமுகம் செய்வது குறித்துத் தம் அமைச்சு ஆராய்வதாகவும் அமைச்சர் கூறினார். இது தொடர்பில் கூடுதல் விவரங்கள் பின்னாளில் வெளியிடப்படும்.
வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம் ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் விருது நிகழ்ச்சியின்போது அமைச்சர் டான் இத்தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். உயிரைப் பறித்த வேலையிட விபத்துகளின் எண்ணிக்கை இவ்வாண்டு அதிகரித்துள்ளது.
ஆண்டின் முதல் பாதியில் 23 உயிரிழப்புச் சம்பவங்கள் வேலையிடங்களில் நிகழ்ந்துள்ளன. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் எண்ணிக்கை 16ஆக இருந்தது.
அமைச்சர் தம் உரையில் ஊழியர்களின் மனநலம் குறித்த முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
அடுத்த ஆண்டு முதல் புதிதாக சேர்க்கப்படும் விருது ஒன்று, வேலையிட மனநலம் தொடர்பில் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. வேலையிடத்தில் மனநல மீள்திறனை வளர்க்கும் நிறுவனங்களுக்கும் நபர்களுக்கும் இவ்விருது வழங்கப்படும்.
"வேலை, வாழ்க்கை இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாமல், சமூக அளவில் தனிமைப்படுத்திக்கொண்டு, வேலை மற்றும் நிறுவனத்தின் முன்னேற்றம் குறித்து நிச்சயமற்ற நிலையை உருவாக்கிய கொவிட்-19 சூழல், மனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்திவிட்டது," என்றார் அமைச்சர் டான்.

