கல்வி அமைச்சு: ஆகஸ்ட் 10 பள்ளி
விடுமுறை என்பதில் மாற்றமில்லை
தேசிய தினத்துக்கு மறுநாளான ஆகஸ்ட் 10ஆம் தேதி, ஆண்டுதோறும் பள்ளி விடுமுறையாக இருந்து வந்துள்ளது. இவ்வாண்டும் அதில் மாற்றமில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் தேசிய தின அணிவகுப்புக்குப் பின் வரும் திங்கட்கிழமை, பள்ளி விடுமுறையாக இருக்காது என்றும் அமைச்சு தெளிவுபடுத்தியது. ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 18 வரை சிங்கப்பூரில் கடுமையாக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட (உயர்த்தப்பட்ட எச்சரிக்கைநிலை) கட்டுப்பாடுகள் காரணமாக தேசிய தின அணிவகுப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று தேசிய தினத்தை அனுசரிக்க, மரினா பே மிதக்கும் மேடையில் சிறிய அளவிலான சடங்குபூர்வ அணிவகுப்பு ஒன்று நடைபெறும்.
கேளிக்கைக் கூடத்தில் விதிமீறல்:
13 பேரிடம் விசாரணை
சட்டவிரோதமாக இயங்கிவந்ததாக சந்தேகிக்கப்படும் உபி ரோடு கேளிக்கைக் கூடம் ஒன்றில் கொவிட்-19 விதிமீறல் தொடர்பில் 13 பேர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிங்கப்பூரிலுள்ள 77 உடற்பிடிப்பு நிலையங்கள், 59 பொதுக் கேளிக்கைக் கூடங்கள் ஆகியவற்றில் கடந்த 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை போலிசார் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அப்போது உபி ரோட்டின் வர்த்தக இடத்தில் 13 பேரும் சிக்கினர்.

