சுகாதார அறிவியல் ஆணையம், சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசியை சிறப்பு ஏற்பாட்டின் கீழ் இறக்குமதி செய்ய இங்குள்ள 11 தனியார் மருத்துவமனைகளுக்கும் மருந்தகங்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, அத்தகைய தடுப்பூசிகளைப் பயன்படுத்தி ஆபத்து உண்டால், அதற்கு மருத்துவரும் தடுப்பூசிப் போட்டுக் கொள்பவரும் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வார்கள் என்று ஆணையத்தின் பேச்சாளர் கூறினார்.
ராபிள்ஸ் மருத்துவக் குழுமம், ஐஹெச்ஹெச் ஹெல்த்கேர் குழுமம் உள்ளிட்ட பல சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்கள் சினோஃபார்ம் தடுப்பூசியைப் பெற முயன்று வருவதாக ஸ்ரெட்ய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் கடந்த புதன்கிழமை கூறியிருந்தது.
சினோஃபார்ம் தடுப்பூசியை ஆகஸ்ட் மாதத்திலிருந்து பயன் படுத்த அவை திட்டமிடுகின்றன.
சினோஃபார்ம், சிங்கப்பூரில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கும் நான்காவது தடுப்பூசி ஆகும். ஆனால் அவற்றை வழங்கும் நிறுவனங்களுக்கு சில நிபந்தனைகள் உண்டு.
உதாரணத்துக்கு நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும், மூன்று மாதத்துக்கு தேவைப்படும் அளவுக்குத் தான், அதுவும் அதிகபட்சம் 5,000 தடுப்பூசிகளைத் தான் இறக்குமதி செய்யமுடியும்.
தடுப்பூசிப் போட்டுக்கொண்டவருக்கு மோசமான பாதிப்பு நிகழ்ந்தால், அதனை 15 நாட்களுக்குள் அவர்கள் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்.
சிறப்பு ஏற்பாட்டின் கீழ் தருவிக்கப்படும் தடுப்பூசிகளுக்கு அரசாங்கம் மானியம் வழங்காது.
அவற்றைப் போட்டுக்கொள்வோருக்கு காயம் ஏற்பட்டால், அரசாங்கத்தின் நிதி உதவியும் கிடைக்காது.

