கடந்த மூன்று மாதங்களில் 129 மாணவர்களுக்கும் பள்ளி ஊழியர்கள் 17 பேருக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டள்ளதாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
இது, தொடக்கப் பள்ளி முதல் புகுமுக வகுப்பு வரையிலான மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில் 0.03% என்று அவர் கூறினார்.
திரு சான் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று இந்த விவரங் களைத் தெரிவித்தார்.
எனினும் பள்ளிகள் கற்றலுக்குப் பாதுகாப்பான இடங்களாக விளங்குகின்றன என்று அவர் பெற்றோருக்கு உறுதி அளித்தார்.
"தொற்று அபாயத்தை முடிந்தவரை குறைவாக வைத்திருக்க கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். தொற்று ஏற்பட்டிருக்கக் கூடியவர்களை முடிந்தவரை விரைந்து கண்டுபிடிக்க கண்காணிப்பு நடப்பில் உள்ளது. அவ்வாறானவர்கள் பள்ளிக்கு வராமல் இருப்பதைத் தடுக்க, கல்வி அமைச்சு அவர்களுக்கு விடுப்பு வழங்குகிறது." என்றார் அவர்.
பொங்கோல் தொடக்கப் பள்ளியில் ஒரு துப்புரவாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அங்கு கட்டாயப் பரிசோதனைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து திரு சான் இந்த விவரத்தை அளித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி அந்தத் தொற்றுக் குழுமத்தில் 12 சம்பவங்கள் பதிவாயின.
மீண்டும் வீட்டிலிருந்து பாடம் கற்கும் முறைக்கு திரும்ப வேண்டும் என்று சில பெற்றோர் தம்மிடம் கருத்துக் கூறியுள்ளதாகவும் வேறுசிலர் அதனை எதிர்த்துள்ள தாகவும் திரு சான் கூறினார்.
வீட்டில் இருந்தபடி கற்க எல்லா மாணவர்களுக்கும் உகந்த சூழல் இருக்காது என்றும் அந்த முறை மாணவர்களின் கற்றலையும் சமூக, மனநலனையும் பாதிக்கக்கூடியது என்றும் அவர் சொன்னார்.

