முயிஸ் எனும் சிங்கப்பூர் இஸ்லாமிய மன்றத்தின் புதிய தலைவராக பெரித்தா ஹரியான் மலாய் நாளிதழின் ஆசிரியர் முகமது சாட் அப்துல் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் ஹலிமா யாக்கோப் அவரை அப்பொறுப்பில் நியமித்தார் என்றும் திரு சாட் ஆகஸ்ட் 7ஆம் தேதி அப்பொறுப்பை ஏற்பார் என்று கலாசார, சமுதாய, இளையர் துறை அமைச்சு நேற்று அதன் அறிக்கையில் தெரிவித்தது.
திரு சாட் முயிஸ் அமைப்பின் ஒன்பதாவது தலைவராக பொறுப்பு ஏற்கவுள்ளார்.
மன்றத்தின் தற்போதைய தலைவரான திரு முகமது அலாமி மூசா, 18 ஆண்டுகள் அப்பதவியை வகித்தார். அவர் 2003இல் முயிஸ் தலைவராக நியமிக்கப்பட்டார் என்றது அமைச்சு.
சிங்கப்பூர் முஸ்லிம் சமூகத்தின் நலனைக் கட்டிக்காத்து நிர்வாகத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அமைப்பாகும். முயிஸ் தலைவர் பதவி என்பது நிர்வாக ரீதியான பதவி அல்ல.
தற்போதைய தலைவர் திரு அலாமி மூசாவின் தலைமையில் முஸ்லிம் சமூகத்துக்குச் சேவையாற்ற சிங்கப்பூர் பள்ளிவாசல்கள் தங்கள் திட்டங்கள், திறன்கள், நிர்வாகம் ஆகியவற்றை வலுப் படுத்தியதாக அமைச்சு கூறியது.
மேலும், அவை சமூக மேம்பாட்டுத் திட்டங்களையும் பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் திட்டத்தையும் அறிமுகம் செய்தது என்று அமைச்சு தெரிவித்தது.

