'99 ரெனோ' எனும் வீட்டுப் புதுப்பிப்பு நிறுவனத்திடம் வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்ற ஆண்டு ஜூலை மாதம் முதல் கடந்த மாதம் வரை பிரெஞ்சு ரோட்டில் அமைந்துள்ள அந்நிறுவனத்திற்கு எதிராக வாடிக்கையாளர்களிடமிருந்து 30 புகார்கள் வந்ததாகப் பயனீட்டாளர் சங்கம் தெரிவித்தது.
முன்பணம் வழங்கியும் புதுப்பிப்புப் பணிகளில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதாகப் பெரும்பாலான புகார்களில் குறிப்பிடப்பட்டது. '99 ரெனோ' நிறுவனத்துடன் சேர்ந்து பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்த்துவைக்க பயனீட்டாளர் சங்கம் முயற்சி செய்திருக்கிறது. ஆனால் முயற்சி தோல்வியில் முடிந்தது. தச்சுவேலை போன்றவற்றுக்கு முன்பணம் வாங்கியபோதும் நிறுவனம் சில பணிகளைத் தொடங்கவில்லை, சில வீடுகளில் புதுப்பிப்புப் பணிகளை முடிக்கவில்லை. இத்தகைய புகார்கள் வந்ததாகச் சங்கம் குறிப்பிட்டது.
கொவிட்-19 சூழலால் ஏற்பட்ட மனிதவளப் பற்றாக்குறை, நிதி நெருக்கடி போன்ற காரணங்களால் புதுப்பிப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டதாக நிறுவனம் சொன்னதென்றும் வாடிக்கையாளர்கள் தெரிவித்திருக்கின்றர்.
புதுப்பிப்புப் பணிகளை முடிக்கத் தேவையான கால அவகாசத்தை நிறுவனத்தால் கணிக்கமுடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அப்படியிருந்தும் வாடிக்கையாளர்களிடமிருந்து தொடர்ந்து முன்பணத்தை வாங்கிக்கொண்டு நிறுவனம் புதிய பணிகளை ஏற்றுக்கொண்டதாகப் பயனீட்டாளர் சங்கம் கூறியது. '99 ரெனோ' கையாண்ட புதுப்பிப்புப் பணிகளின் மதிப்பு 6,000லிருந்து 54,000 வெள்ளிக்கு இடைப்பட்டிருந்தது என்று வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
'99 ரெனோ' நிறுவனத்தை நன்கு கண்காணிக்கப்போவதாகவும் தேவைப்பட்டால் அதற்கு எதிராகத் தகுந்த நடிவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் கூறியது.

