சிங்கப்பூரில் உற்பத்தித் துறை நடவடிக்கை தொடர்ந்து 13வது மாதமாக கடந்த மாதம் வளர்ச்சி அடைந்தது. 2018 டிசம்பருக்குப் பிறகு அது உச்சத்தை எட்டியது.
கொள்முதல் நிர்வாகிகள் குறியீடு (பிஎம்ஐ) கடந்த மாதம் 51ஆக பதிவானது. ஜூன் மாதத்துடன் ஒப்புநோக்க அது 0.2 புள்ளி அதிகம். புளூம்பெர்க் கருத்துக்கணிப்பில் பொருளியல் நிபுணர் முன்னுரைத்திருந்த 50.8 புள்ளியைவிட அது அதிகம்.
பிஎம்ஐ குறியீட்டில் 50க்கு மேல் பதிவானால் அது வளர்ச்சியைக் குறிக்கிறது. மின்னணுவியல் துறைக்கான பிஎம்ஐ 50.8ஆக பதிவானது. ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் அது 0.2 புள்ளி அதிகம். தொடர்ச்சியாக 12வது மாதமாக அத்துறை வளர்ச்சி கண்டது.
சிங்கப்பூர் அண்மையில் இரண்டாம் கட்ட (உயர்த்தப்பட்ட விழிப்புநிலை) நடைமுறைக்குத் திரும்பியபோது விநியோகத் தொடர் பாதிப்பு அடையக்கூடும் என்று அஞ்சப்பட்டபோதும், உற்பத்தி மற்றும் மின்னணுவியல் துறைகள் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செல்வதை இந்த பிஎம்ஐ குறியீடு காட்டுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு குறியீடும் தொடர்ந்து ஐந்து மாதங்களாக விரிவடைந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதிகளும் வேகமாக வளர்ச்சி கண்டன. கொவிட்-19 கட்டுப்பாடுகள் அண்மையில் கடுமையாக்கப்பட்டபோதும் இவ்வாண்டின் பிற்பாதியில் உற்பத்தித் துறை தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருவதாக சிங்கப்பூர் கொள்முதல், பொருள் நிர்வாகக் கழகத்தின் தொழில்துறை ஈடுபாடு, மேம்பாட்டுப் பிரிவுக்கான துணைத் தலைவர் சோஃபியா போ கூறினார்.
புதிய ஆர்டர், புதிய ஏற்றுமதிகள், தொழிற்சாலை உற்பத்தி, வேலைவாய்ப்பு ஆகியவை வளர்ச்சி கண்டு வந்ததால் கடந்த மாதம் மின்னணுவியல் துறைக்கான பிஎம்ஐ குறியீடு சற்று கூடியது.
சிங்கப்பூரின் உற்பத்தி மற்றும் மின்னணுவியல் துறைகள் தொடர்ந்து மீட்சியுடன் இருப்பதாகவும் குறுகியகால வளர்ச்சிக்கு முக்கிய தூணாக அவை விளங்குவதாகவும் ஓசிபிசி வங்கியின் நிதி ஆய்வு, உத்திப் பிரிவின் தலைவர் சலினா லிங் தெரிவித்தார்.
இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் உள்நாட்டு உற்பத்தி மிதமான வளர்ச்சி காணும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். எனினும், முழு ஆண்டு உற்பத்தித் துறை வளர்ச்சி 10 விழுக்காட்டிற்கும் மேல் இருக்கும் என அவர் முன்னுரைக்கிறார்.

