மின் வர்த்தகத் தளங்களில் கோடரி மற்றும் பல வகைகளில் பயன்படுத்தக்கூடிய பொருட்களை ஒருவர் வாங்கும்போது, அவரது வயதைச் சரிபார்க்கும் முறையை அமல்படுத்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று உள்துறை துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் தெரிவித்துள்ளார்.
ஆயுதம் என்று வகைப்படுத்தப்பட்ட பொருட்களின் பட்டியலை மேலும் விரிவுபடுத்துவது பற்றியும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் எந்த பொருள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அது மற்றவர்களுக்கு ஆபத்தாக முடியலாம் என்பது பற்றியும் ஆராயப்படும் என்றும் திரு டான் விவரித்தார்.
மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆயுதங்களை இளம் வயதினர் வாங்குவதைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெம்பனிஸ் குழுத்தொகுதி உறுப்பினர் டெஸ்மண்ட் சூ கேட்ட கேள்விக்கு அமைச்சர் டான் பதிலளித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளில், மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஆயுதங்களை வைத்திருந்ததற்காக 131 இளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் மேலும் கூறினார்.
கடந்த மாதம் 4ஆம் தேதியன்று, ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை ஒன்றில் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளி நேரத்தின்போது கொலை செய்யப்பட்டார்.
அவரை கொலை செய்ததாக, அதே பள்ளியைச் சேர்ந்த உயர்நிலை நான்கு மாணவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது.
இரு மாணவர்களும் இதற்கு முன் அறிமுகமானவர்கள் அல்ல. கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமாகக் கருதப்பட்ட ஒரு கோடரியை அந்த மாணவர் இணையத்தில் வாங்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள் சட்டத்தின்படி ஆறு ஆயுதங்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் என்று உள்துறை அமைச்சு வகைப்படுத்தியுள்ளது.
நீண்ட வாள், ஈட்டி, ஈட்டித் தலைகள், குத்துவாள், இடைவாள், சில வகை வில்லும் அம்புகளும் ஆகியவையே அந்த ஆறு ஆயுதங்கள்.
இத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்துவோர் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவற்றின் உரிமையாளர்கள் அவற்றைப் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என்றும் திரு டான் வலியுறுத்தினார்.
“இத்தகைய ஆயுதங்கள் வாங்குவோரின் வயதைச் சரிபார்க்கும் முறையை மின் வர்த்தகத் தளங்களும் சில்லறை விற்பனைக் கடைகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதிமுறையை அமல்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
“அப்போதுதான் வயது குறைந்தவர்களின் கைகளில் அத்தகைய ஆயுதங்கள் கிடைக்கும் வாய்ப்பைத் தடுக்க முடியும்,” என்றும் அமைச்சர் கூறினார்.
இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்குப் பதிலளித்த உள்துறை அமைச்சு, “எப்படிப்பட்ட விதிமுறைகளை அமல்படுத்துவது என்பது குறித்து இன்னும் ஆராயப்பட்டு வருகிறது. அந்த விதிமுறைகள் துப்பாக்கிகள், வெடிபொருள்கள், ஆயுதங்கள் சட்டத்தின் அடிப்படையில் இருக்கும்,” என்று தெரிவித்தது.