முன்னாள் காதலியின் வீட்டுக்குள் ஒன்பது முறை அத்துமீறி நுழைந்து சுமார் $40,000 மதிப்புள்ள நகையையும் ரொக்கத்தையும் திருடிய பிலிப்பீன்ஸ் ஆடவருக்கு இன்று 22 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு பிப்ரவரிக்கும் இவ்வாண்டு ஜனவரிக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்த வீட்டுக்குள் புகுந்து $12,500 ரொக்கத்தையும் சிறுசிறு நகைகளையும் திருடியதை மெரேனோ நினோ ஜஸ்னர் ஜாஷுவா தகிபாவ், 27, எனப்படும் அந்த ஆடவர் ஒப்புக்கொண்டார். திருடிய நகைகளை $27,746க்கு அவர் அடைமானம் வைத்தார்.
ரொக்கம், நகைகள் என மொத்தம் $40,246 மதிப்புள்ளவற்றை அவர் திருடியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்போது 23 வயதாகும் பெண்ணை இவர் 2015 முதல் 2019 வரை காதலித்து வந்தார்.
காதல் நெருக்கம் அதிகரித்ததால் காதலியின் வீட்டுக்குள் குடியேறிய ஆடவர், அங்கேயே சில ஆண்டுகள் தங்கி இருந்தார். அப்போது வீட்டின் சாவிகளை அந்தப் பெண் அவரிடம் கொடுத்தார். காதலிக்குத் தெரியாமல் கள்ளச்சாவி செய்து வைத்துக்கொண்டார் ஆடவர். 2019ல் காதல் முறிந்த பின்னர் 2020 ஜனவரி முதல் கடன் வாங்கத் தொடங்கினார்.
கடன்களை அடைக்கத் திணறியதால் கள்ளச்சாவி மூலம் முன்னாள் காதலியின் வீட்டுக்குள் புகுந்து திருடினார்.