மாணவர்களுக்குப் போதுமான தூக்கம் இருப்பதை உறுதி செய்ய நேரம் கழித்து வகுப்புகளைத் தொடங்க பள்ளிகளுக்கு முழு சுதந்திரம் இருப்பதாக கல்வித் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் தெரிவித்தார். இருப்பினும், தங்கள் பிள்ளைகளுக்கு போதுமான தூக்கம் இருப்பதை பெற்றோரும் உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.
பள்ளிகள் தொடங்கும் நேரத்தை மாற்றியமைக்க அரசாங்கம் பரி
சீலித்து வருகிறதா என்ற பாட்டாளிக் கட்சியின் செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேமஸ் லிம்மின் கேள்விக்கு திருவாட்டி சுன் பதிலளித்தார்.
தற்போது பள்ளிகள் காலை 7.30 மணிக்கு முன்பு தொடங்குவதில்லை. பெற்றோரிடமிருந்து பெறப்படும் கருத்துகள், பள்ளி முடியும் நேரம், போக்குவரத்து ஏற்பாடுகள், பள்ளியைச் சுற்றியுள்ள வட்டாரங்களில் நிலவும் போக்குவரத்து சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நேரம் கழித்து வகுப்பு
களைத் தொடங்க பள்ளிகள் முடிவெடுக்கலாம் என்றார் திருவாட்டி சுன்.
தூக்கப் பற்றாக்குறையால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதைத் திருவாட்டி சுன் சுட்டினார். மாணவர்கள் எத்தனை மணி நேரம் தூங்குகின்றனர் என்பதையும் அது அவர்களது வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் கண்டுபிடிக்க இரண்டு ஆய்வு
களுக்குக் கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக திருவாட்டி சுன் கூறினார்.
"நேரம் கழித்து பள்ளிகளைத் தொடங்குவது மட்டுமல்லாது, மாணவர்கள் போதுமான தூக்கம் பெறுவது, அவர்களது வேலைப் பளுவை நிர்வகிப்பது, மின்னிலக்கச் சாதனங்களைப் பயன்படுத்துவது ஆகியவற்றை உறுதி செய்ய பெற்றோருடன் இணைந்து செயல்பட வேண்டும்," என்றார் திருவாட்டி சுன்.
உயர்நிலைப்பள்ளிகள் வெவ்வேறு நேரங்களில் தொடங்கும் முறையைக் கல்வி அமைச்சு நடைமுறைப்படுத்துவது குறித்து இணைப் பேராசிரியர் ஜேமஸ் லிம் தமது பரிந்துரையை முன்வைத்தார். பதின்மவயதினருக்கு இந்த அணுகு முறை பலனைத் தருவதாக மூன்று அறிவியல் நிபுணர்கள் தெரிவித்திருப்பதை அவர் சுட்டினார். நடத்தப்படும் ஆய்வுகளின் முடிவுகளைக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
கொவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகப் பள்ளிகள் வெவ்வேறு நேரங்களில் தொடங்கும் முறையை ஏற்கெனவே கடைப்பிடித்து வருவதாக திருவாட்டி சுன் தெரிவித்தார்
தங்கள் பிள்ளைகள் இரவு நேரங்களில் நீண்டநேரம் விழித்திருக்காமல் சீக்கிரம் தூங்க செல்வதை உறுதி செய்ய பெற்றோரை பள்ளிகள் ஊக்கிவிக்க வேண்டும் என்று மவுண்பேட்டன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு லிம் பியாவ் சுவான் கூறினார்.
"என் பிள்ளைகள் சிறு வயதினராக இருந்தபோது அவர்களை இரவு நேரத்தில் சீக்கிரம் தூங்க சொல்வேன்.
"இதனால் எவ்விதப் பிரச்சினையும் இன்றி அவர்களால் பள்ளிக்குச் செல்ல முடிந்தது. எனவே, நேரம் கழித்து பள்ளிகளைத் தொடங்குவதற்குப் பதிலாக பிள்ளைகளை சீக்கிரம் தூங்க வைப்பதை நாம் ஏன் பரிசீலிக்கக்
கூடாது?" என்று திரு லிம் தமது கருத்தை முன்வைத்தார்.

