வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் மேலும் 800 இடைக்கால வாடகை வீடுகள் ஒதுக்கிவைக்கப்படவுள்ளன. தேவைக்கேற்பக் கட்டித்தரப்படும் (பிடிஓ) வீடுகளுக்காக காத்திருக்கும் குடும்பங்களுக்காக இவ்வீடுகள் ஒதுக்கி வைக்கப்படுகின்றன. கட்டுமான வேலைகள் தள்ளிப்போவதால் பாதிக்கப்பட்டோரும் இவ்வாடகை வீடுகளுக்குத் தகுதிபெறலாம். இருப்பினும், விண்ணப்பிப்போருக்கான விதிமுறைகள் மேலும் கடுமையாகப்பட்டுள்ளன.
இதன்படி 'பிபிஎச்எஸ்' எனப்படும் பிள்ளைப்பேறு இடைக்கால குடியிருப்புத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்புவோரது ஒட்டுமொத்த மாதாந்திர வீட்டு வருமானம் $7,000க்கு மேல் இருக்க முடியாது என்று வீவக நேற்று தெரிவித்தது.
இப்புதிய விதிமுறை இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது.
பிடிஓ வீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட விற்பனை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு வாடகை வீட்டுக்கான விண்ணப்பம் கருதப்படும் என்றது கழகம்.
இதற்கிடையே, வீட்டு விற்பனை விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின் வருமானம் $7,000க்குக்கீழ் குறைந்திருந்தால் கழகத்துடன் நேரடியாகத் தொடர்புகொண்டு உதவி நாடலாம் என்றும் கூறப்பட்டது.
வருமான உச்ச வரம்பை இவ்வாறு விதிப்பதால், அதிகளவு மானிய உதவியில் வழங்கப்படும் வாடகை வீடுகள் உரியவரைச் சென்றடையும் என்றது வீவக. இக்குறிப்பிட்ட பிரிவினர், சொத்துச் சந்தையில் உள்ள வீடுகளுக்கு வாடகை கட்ட இயலாத நிலையில் உள்ளவர்கள்.
'பிடிஓ' வீடுகள் தயாராகும்வரை பிள்ளைப்பேறு இடைக்கால குடியிருப்புத் திட்டத்தின்கீழ் தகுதிபெறுவோருக்கு இடைக்கால வாடகை வீடுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும். மார்சிலிங் வட்டாரத்தில் அமைந்துள்ள ஈரறை வீட்டுக்கு $400, ஹவ்காங் வட்டாரத்தின் மூவறை வீட்டுக்கு $600, தியோங் பாரு வட்டாரத்தில் உள்ள நான்கறை வீட்டுக்கு $1,500 என வாடகை வேறுபடுகிறது.
திருமணமான தம்பதியருக்குப் 18 வயது அல்லது அதற்குக் குறைவான வயதில் பிள்ளைகள் இருந்தால், பிபிஎச்எஸ் திட்டத்திற்குத் தகுதிபெறும் விண்ணப்பதாரர்களில் அவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். குழந்தை பிறக்கவுள்ள நிலையில் பெற்றோராகவுள்ளோருக்கும் இது பொருந்தும்.
இதற்கிடையே, பிபிஎச்எஸ் திட்டத்தின்கீழ் வாடகை வீட்டைத் தேர்ந்தெடுப்பதற்காக அழைப்பு விடுத்தும் இரண்டு முறை வராதோர், மீண்டும் திட்டத்தின்கீழ் தகுதிபெறுவதற்காக விண்ணப்பிக்க ஓராண்டு காலம் காத்திருக்க நேரிடும். அதேபோல் பிபிஎச்எஸ் வாடகை வீட்டைத் தேர்ந்தெடுத்த பின்னர், கட்டணம் செலுத்தாதவரும் காத்திருக்க நேரும்.
கடந்த ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தும் விண்ணப்பித்தவர்களில் 50 விழுக்காட்டினர், வீட்டைத் தேர்ந்தெடுக்க வரவில்லை என்பதே இவ்விதிமுறைக்குக் காரணம்.
மாத அடிப்படையில் இதுவரை நடந்துவந்த பிபிஎச்எஸ் தெரிவுத் திட்டம், இனி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும். வாடகைக்கு விடுவதற்கான அனைத்து வீடுகளையும் ஒருங்கிணைத்து விண்ணப்பித்தவர்களுக்குக் கூடுதல் தெரிவுகளை வழங்க இது ஏற்றதாக இருக்கும் என்று கூறப்பட்டது.

