என்யுஎஸ் மாணவர்களுக்கு முன்னோடி கொவிட்-19 பரிசோதனை
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக (என்யுஎஸ்) மாணவர்களும் அலுவலர்களும் புதியதொரு கொவிட்-19 பரிசோதனை முறையை வரும் 10ஆம் தேதி முதல் தங்களைத் தாங்களே செய்து பார்ப்பார்கள். விரைவு மற்றும் எளிது (FET) என்னும் அடிப்படையிலான அந்த முன்னோடி பரிசோதனை முறையை விளக்கி மாணவர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை ஒன்று 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளின் கவனத்துக்கு வந்தது. பரிசோதனைச் சாதனம் ஒன்று மாணவர்களுக்கும் அலுவலர்களுக்கும் கொடுக்கப்படும்.
பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருப்பவரா என்பதைப் பொறுத்தும் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரத்தைப் பொறுத்தும் அவர்கள் அந்த சாதனம் மூலம் தங்களைத் தாங்களே பரிசோதித்துக்கொள்ளலாம்.
பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருக்கும் மாணவர்களும் அலுவலர்களும் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டிருந்தால் மாதம் ஒருமுறை அவர்கள் பரிசோதனை செய்துகொண்டால் போதுமானது. அதேநேரம் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களும் ஒரு தடுப்பூசி மட்டும் போட்டுக்கொண்டவர்களும் வாரா வாரம் கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்வார்கள்.
ஜப்பானின் ஒலிம்பிக் அனுபவம் நமக்குப் பாடம்: மன்ற நாயகர்
தோக்கியோ 2020 விளையாட்டுப் போட்டிகளை ஜப்பான் நடத்தும் விதம் கொவிட்-19 இடர்ப்பாட்டை சமாளிப்பது என்பதற்குரிய பாடமாக அமைந்துள்ளது என்று சிங்கப்பூர் நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் ஒலிம்பிக் மன்றத் தலைவருமான திரு டான் தற்போது தோக்கியோவில் உள்ளார். எல்லைகளைத் திறந்து வெளிநாட்டினரை வரவேற்கக் காத்திருக்கும் சிங்கப்பூருக்கு இந்தப் பாடம் பொருத்தமான ஒன்று என்றார் அவர்.
கொவிட்-19 சிரமங்களுக்கு இடையே தோக்கியோ போட்டிகளையும் உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டுகளையும் ஜப்பான் உலகிற்குத் தந்துள்ள வெகுமதி என்றார் அவர். சாதிக்கும் உணர்வுகளை மேலெழுப்பும் வகையிலான விளையாட்டுத் திறன்கள் மூலம் இவ்விரண்டும் சாத்தியமாகி உள்ளன என்றும் திரு டான் கூறினார்.
"கொவிட்-19 நிலைமையைச் சமாளிப்பது என்பது ஆபத்துகளைச் சமாளிப்பதன் தொடர்பிலானது. மேலும் எந்தளவுக்கு நீங்கள் சிரமங்களைத் தாங்கும் சக்தி படைத்தவர்கள் என்பதையும் பொறுத்தது," என்று தோக்கியோவைத் தளமாகக் கொண்ட ஊடகம் ஒன்றிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்ற நாயகர் என்ற முறையில் மேற்கொண்ட 3 நாள் அதிகாரத்துவ வருகையின் முடிவில் அவர் அந்த ஊடகத்தின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
$461,000 கையாடல் வழக்கில் சிறை
முதலீட்டு நிறுவனங்களில் $461,000க்கு மேற்பட்ட தொகையைக் கையாடியவர்களில் ஓர் ஆடவருக்கு நேற்று ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. லோ ஸி சியாங், 31, எனப்படும் அவர் தம் மீதான இரு நம்பிக்கை மோசடிக் குற்றங்களை ஒப்புக்கொண்டார். மோசடி மூலம் பெற்ற பணத்தின் ஒரு பகுதியை கார் வாங்க அவர் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

