உடல் எடை தொடர்பான 'பிஎம்ஐ' குறியீட்டை அளவிடுவது, துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ள தழும்புகளை உடலில் அடையாளம் காண்பது போன்ற கூடுதல் அம்சங்கள், ஆறு மாதத்திற்கு ஒரு முறை வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் செய்துகொள்ளும் மருத்துவப் பரிசோதனையில் சேர்க்கப்படவுள்ளன.
இம்மாதம் 29ஆம் தேதிமுதல் கருத்தரித்தல், தொற்றுநோய் ஆகியவை தொடர்பில் மட்டும் பணிப்பெண்களைப் பரிசோதிக்காமல் மருத்துவர்கள் துன்புறுத்தல் தொடர்பான அறிகுறிகளையும் அடையாளம் காண்பர்.
மேலும், உதவி கேட்பதற்குப் பாதுகாப்பான சூழலைப் பணிப்பெண்களுக்கு ஏற்படுத்தித் தரும் வகையில் முதலாளிகள் பரிசோதனை அறைக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது. வீட்டில் இருந்தவாறு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதும் அனுமதிக்கப்படாது.
பரிசோதனை முடிவு தொடர்பிலான அனைத்து மருத்துவப் பரிசோதனை பத்திரங்களையும் மருந்தகங்கள் மனிதவள அமைச்சிடம் அனுப்பவேண்டும்.
இல்லப் பணிப்பெண்களின் எடை, உயரம் போன்றவற்றைப் பதிவுசெய்து 'பிஎம்ஐ' குறியீட்டை மருத்துவர்கள் குறித்து வைத்துக்கொள்வதால் நாளடைவில் குறிப்பிடத்தக்க எடை குறைவு போன்ற எச்சரிக்கை அறிகுறிகள் எழும்போது தங்களின் பதிவுகளை அவர்கள் ஒப்பிட்டு விசாரணை கோர உதவலாம்.
சந்தேகத்திற்குரிய, காரணம் கூற முடியாத காயங்கள் தொடர்பில் பின்னர் அதிகாரிகளும் விசாரணையைத் தொடர்வர்.
சுகாதார அமைச்சு, மருத்துவர்கள், முதலாளிகள், பணிப்பெண் நிறுவனங்கள் ஆகிய தரப்புகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இந்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சு தெரிவித்தது.
பணிப்பெண்ணுக்கு உணவு தராதது, துன்புறுத்துவது தொடர்பில் பல சம்பவங்கள் நேர்ந்ததை அடுத்து இப்புதிய நடைமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
மியன்மாரைச் சேர்ந்த பணிப்பெண்ணுக்குப் போதுமான உணவு தராமலும் பல்வேறு கொடுமைகள் இழைத்தும் பணிப்பெண்ணின் மரணத்திற்குக் காரணமானார் அவரின் முதலாளி காயத்ரி முருகையன். ஏப்ரலில் அவருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. உயிரிழக்கும்போது அந்தப் பணிப்பெண்ணின் எடை 24 கிலோவாக இருந்தது. அவர் தன் பணிப்பெண் பொறுப்பை காயத்ரியின் வீட்டில் தொடங்கியதிலிருந்து தன் பிஎம்ஐயின் 38 விழுக்காட்டை இழந்துவிட்டதாகக் கண்டறியப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில் இந்தோனீசியப் பணிப்பெண்ணுக்குத் தொடர்ந்து அவர் முதலாளி கொடுமை இழைத்து வந்ததால் அந்தப் பணிப்பெண் 15 மாடி உயரத்திலிருந்து பால்கனி வழியாக இறங்கித் தப்பிக்கும் நிலை ஏற்பட்டது. அந்த முதலாளிக்கு கிட்டத்தட்ட 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ள இந்த மருத்துவப் பரிசோதனைகளுடன் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களின் நலனை ஆதரிக்கும் வகையில் மேலும் பல நடைமுறைகள் சேர்க்கப்படும் என்று அமைச்சு கூறியது.