எம்ஆர்டி ரயிலில் பயணம் செய்தபோது பிரிட்டனைச் சேர்ந்த பெஞ்சமின் கிளின், 40, முகக்கவசம் அணியவில்லை. இச்சம்பவம் இவ்வாண்டு மே மாதத்தில் நடந்தது. நேற்று அவர் மீதான வழக்கு விசாரணையின் முதல் நாள். தாம் இறையாண்மைக்கு மட்டுமே கட்டுப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் தமக்குப் பொருந்தா என்றும் அவர் கூறினார்.
"நான் குற்றத்தை ஒப்புக்கொள்ளவும் மாட்டேன் குற்றம் புரியவில்லை என்று கூறவும் மாட்டேன்," என்றார் தற்போது தடுப்புக் காவலில் உள்ள ஆடவர்.
நீதிமன்றத்திற்கு வந்திருந்த ஓர் ஆடவரைக் காண்பித்து அவர் தம்முடைய 'சட்ட ஆலோசகர்' என்றும் கிளின் குறிப்பிட்டார். கிளினை இதற்குமுன் பிணையில் எடுத்தது அந்த ஆடவரே என்றும் ஆடவரின் பெயர் திரு அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் என்றும் பின்னர் தெரியவந்தது. இருப்பினும், சட்ட ஆலோசகர் என்ற அங்கீகாரம் திரு அப்துல் ரஷிட்டுக்கு சிங்கப்பூரில் இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, இங்கு யாரையும் அவர் பிரதிநிதிக்க முடியாது என்றார்.
தாம் ஒரு பொதுத் தூதர் என்றும் 'கிங்டம் ஃபிலிப்பினா ஹசியன்டா' ஆதரவாளர் என்றும் கூறிய திரு அப்துல் ரஷிட், தம் இறையாண்மைத் தோழரைத் தற்காப்பதற்காக வந்துள்ளதாகத் தெரிவித்தார். இது சிங்கப்பூரின் சட்டதிட்டத்திற்குப் புறம்பானதாகக் கூறினார் நீதிபதி.
கிளின் பேசிய விதத்தைக் கொண்டு அவருக்கு மனநல மதிப்பீடு தேவை எனத் தாம் சந்தேகிப்பதாகக் கூறி அவரை மனநலக் கழகத்திற்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இதைக் கேட்டு அதிருப்தி அடைந்த கிளின், "சிங்கப்பூரின் சட்டதிட்டம் என்னை நடத்தும் முறை வெறுக்கத்தக்கது," என்று கூச்சலிட்டார். அதற்குக் கூடத்தில் அமர்ந்திருந்த மாது ஒருவரும் கைதட்டியதாகக் கூறப்பட்டது. நீதிமன்றத்தில் பின்பற்றவேண்டிய ஒழுக்க முறையைப் பின்னர் நீதிபதி அவருக்கு நினைவூட்டினார்.