ஆறு ஆண்டுகளுக்கு முன்னதாக தமது அண்ணன் அணிவகுத்துச் சென்ற அதே அணியில் நேற்று பங்குபெற்ற தேசிய சேவையாளர் கார்ப்பரல் உதயநிதி சிதம்பரம், வாழ்நாளில் இதை மறக்க முடியாது என்றார்
'மகிழ்ச்சி வேட்டு முழக்கம்' என்ற அங்கம் புதிதாக இருந்ததாகக் கூறிய உதயா, இதனைத் தாமும் தமது குழுவினரும் கவனமாகப் பயிற்சி செய்து கற்றுக்கொண்டதாகக் கூறினார்.
2015ஆம் ஆண்டின்போது பொன்விழா தேசிய தின அணிவகுப்பில் தமது அண்ணன் கலந்துகொண்டதைப் பற்றி பகிர்ந்த உதயநிதி, அவரிடமிருந்து சில திறன்களைக் கற்றுக் கொண்டதாகச் சொன்னார். "நேர வரம்புக்குள் அணிவகுத்தல், சரியான கை அசைவுகள் போன்றவற்றுக்கான சில உத்திகளைக் கற்றுக்கொண்டேன்," என்றாரவர்.
பல மணி நேரம் நீடித்த ஒத்திகைகளின்போது சாப்பிடும் நேரத்தைத் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். அத்துடன், சிறு குழுக்களுடன்தான் உறவாட வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் இருந்ததாக உதயநிதி கூறினர்.
"சுகாதார பாதுகாப்பு குறித்து என் பெற்றோர் தொடக்கத்தில் கவலை கொண்டனர். ஆயினும், ஒத்திகைகளின்போது எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றி விளக்கியபோது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது," என்றார் அவர்.

