சிவப்பு வெள்ளை ஆடை அணிந்த சிங்கப்பூரர்கள் இவ்வாண்டு தேசிய தின அணி வகுப்பின்போது தேசிய கொடி பறந்து செல்வதைக் காண தீவு முழுவதும் சிறுசிறு குழுக்களாகக் கூடினர்.
சினூக் ரக ஹெலிகாப்டர்களும் எஃப்-15எஸ்ஜி ரகப் போர்விமானங்களும் காலை சுமார் 9.50 மணிக்கு தீவின் பல பகுதிகளுக்குப் பறந்துசென்றன. இரண்டு அப்பாச்சே ஹெலிகாப்டர்கள் உடன்செல்ல சினூக் ரக ஹெலிகாப்டர்களிலிருந்து தேசிய கொடி பறந்தது. ஒரே நேரத்தில் இரண்டு பாதைகளில் அவை பறந்து சென்றன.
ஓர் அணி மேற்கு திசையில் உள்ள வெஸ்ட் கோஸ்ட், ஜூரோங், சுவா சூ காங், புக்கிட் தீமா, புக்கிட் பாஞ்சாங் ஆகிய வட்டாரங்களுக்கும் மற்றோர் அணி கிழக்குநோக்கி ஈஸ்ட் கோஸ்ட், சாங்கி, பாசிர் ரிஸ் பிடோக், பொங்கோல், காத்திப் ஆகிய வட்டாரங்களுக்கும் சென்றது. தோ பாயோ, உட்லண்ட்ஸ், கிளிமெண்டி போன்ற குடியிருப்புப் பேட்டை களுக்கு சுமார் மணிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து எஃப்-15எஸ்ஜி ரகப் போர்விமானங்கள் சாகசம் புரிந்தன.
குடியிருப்புப் பேட்டைகளில் உயரமான அடுக்குமாடி வீடுகளில் பொதுமக்கள் ஆங்காங்கே நின்று தேசிய கொடி பறந்துசெல்வதைப் பார்த்தனர். ஹெலிகாப்டர்களையும் சிறுபிள்ளைகள் இடையூறு இல்லாமல் பார்ப்பதற்காக அவர் களைத் தங்கள் தோள்களில் சுமந்தனர் பெற்றோர்.
ஸ்கைவில்@டாவ்சன் அடுக்குமாடிக் கட்டடக் கூரையில் தமது மூன்று வயது மகன் ஆமீர் ஈஷானுடன் நின்று விமானங்கள் பறந்துசெல்வதைப் பார்த்தார் 43 வயது ஆசிரியர் திரு சுல்தான் ஷமீது.
என் முன்னாள் மாணவர் போர்விமானி என்பதால் கடந்த ஆண்டு அவரது விமானம் பறந்து செல்வதைப் பார்க்க மகனை இங்கு அழைந்து வந்தேன். இந்த ஆண்டு அதனை வழக்கமாக்கிக் கொண்டோம் என்றார் அவர்.
நகர்ப்பகுதியில், மரினா அணைக்கட்டின் மேலே சுமார் 150 பேர் திரண்டனர். ஆனால் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்க அவர்கள் மறக்கவில்லை. அதேபோன்ற காட்சிதான் பாடாங் திடலைச் சுற்றிய பகுதியிலும் காணப்பட்டது.

