தென்கிழக்காசியாவுடனான பொருளியல் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது குறித்து இந்தியா ஆலோசிக்கவேண்டும் எனத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் வலியுறுத்தினார். தென்கிழக்காசியா, இந்தியா ஆகிய இரண்டு வட்டாரங்களிடம் ஒன்றுக்கொன்று கைகொடுக்க வகைசெய்யும் அம்சங்கள் இருக்கின்றன.
அவற்றை நன்கு உபயோகித்து, கிருமிப் பரவலுக்குப் பிந்தைய காலத்தைக் கருத்தில்கொண்டு, வட்டாரங்களுக்கு இடையிலான தொடர்பை மீட்டு விநியோகச் சங்கிலியை மேம்படுத்திக்கொள்ளுமாறு திரு ஹெங் கேட்டுக்கொண்டார்.
"உலகளவில் விநியோகச் சங்கிலியைப் பல்வகைப்படுத்தி அதை மேலும் திடமாக்குவதில் இந்தியாவிற்கு முக்கியப் பங்குண்டு," என்றார் அவர்.
"உள்ளூர் சந்தையையும் தாண்டிப் பங்காற்றுவதற்கான ஆற்றலும் வளங்களும் இந்திய நிறுவனங்களிடம் உள்ளன, அந்தச் சந்தை பெரிதாக இருப்பது இதற்குக் காரணம்," எனத் திரு ஹெங் சுட்டினார். சிஐஐ என்றழைக்கப்படும் இந்தியத் தொழிற்துறை சம்மேளனம் நடத்திய ஆண்டுக் கூட்டத்தின் தொடக்க அமர்வில் அமைச்சர் பேசினார். இம்முறை மெய்நிகர் வவாயிலாகக் கூட்டம் நடைபெற்றது. ஆசியானும் இந்தியாவும் மின்னிலக்கத் தொடர்பை மேம்படுத்துவது முக்கியம் எனத் திரு ஹெங் குறிப்பிட்டார். வட்டார அளவிலான முழுமையான பொருளியல் பங்காளித்துவத்தில் இந்தியா இன்னமும் இடம்பெறலாம் என்பதை அவர் வலியுறுத்தினார்.
வட்டார அளவிலான முழுமையான பொருளியல் பங்காளித்துவம் சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் நடப்புக்கு வந்தது.
அதை கடந்த ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூர் மறுவுறுதிப்படுத்தியது.
2019ஆம் ஆண்டில் இந்தியா அதிலிருந்து விலகிக்கொண்டது.
உலகின் ஆகப் பெரிய வர்த்தக ஒப்பந்தமான இந்த பங்காளித்துவ உடன்பாட்டில் அனைத்து ஆசியான் உறுப்பு நாடுகளுடன் ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், நியூசிலாந்து, தென்கொரியா ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
இரு தரப்பின் மின்னிலக்கப் பொருளியல்களை மேலும் சிறப்பாக ஒருங்கிணைக்க சிங்கப்பூர் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாகப் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங் கூறினார்.

