தனது மகனைக் கடித்து, அவரது மூச்சை அடைத்து, சைக்கிளில் கட்டிவைத்த தந்தைக்குச் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.
36 வயது விநியோக ஓட்டுநரான அவருக்கு ஒன்பது மாதச் சிறைத் தண்டனையும் 4,500 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
தடை உத்தரவு இருப்பதால் குற்றவாளியின் பெயர் வெளியிடப்படவில்லை.
சிறுவரைக் கொடுமைப் படுத்தியதாக ஒரு குற்றச்சாட்டு, வேண்டுமென்றே காயப்படுத்தியதாகச் சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டு, வேண்டுமென்றே தொந்தரவு செய்ததாக ஒரு குற்றச்சாட்டு ஆகிய மூன்றையும் குற்றவாளி ஒப்புக்கொண்டார்.
சாலையில் வன்முறையில் ஈடுபட்டதாக அவர் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டு உட்பட மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் தீர்ப்பின்போது கருத்தில்கொள்ளப்பட்டன.
2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குற்றவாளியின் மனைவி அவர்களின் இரண்டு மகன்களையும் பொது மருந்தகத்திற்கு அழைத்துச் சென்றார்.
அப்போது ஒரு மகனுக்கு வயது ஐந்து.
மற்றொரு மகனுக்கு ஒரு வயது.
விளையாடிக்கொண்டிருந்தபோது மூத்த மகன் தம்பியின் காதைக் கடித்தார்.
அன்று மாலை அது தெரியவந்ததும் குற்றவாளி மூத்த மகனைத் தொடையில் பிரம்பால் அடித்தார்.
அடுத்த மாதம் மருத்துவமனைக்குச் சென்றபோது குற்றவாளி அந்தச் சிறுவனை வலுக்கட்டாயமாகப் பிடித்து, அவரது கால்களை முடக்கி, தரையில் படுக்கவைத்ததைத் தாதி ஒருவர் பார்த்தார்.
சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுவனின் உடலில் காயங்கள் இருந்ததையும் மருத்துவர் ஒருவர் கண்டார்.
2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது வாகனத்தில் வாந்தி எடுத்ததற்குக் குற்றவாளி சைக்கிள் கம்பியைப் பயன்படுத்தி சிறுவனின் கைகளைக் கட்டியிருக்கிறார். அழுதுக்கொண்டிருந்த அந்தச் சிறுவனைத் தான் வெறுப்பதாகவும் கூறியிருக்கிறார்.
துன்புறுத்தலிலிருந்து தப்பிக்க முயன்றபோது சிறுவனின் ஒரு பல் விழுந்தது.
பொதுமக்களில் ஒருவர் சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
குற்றவாளி தற்போது தனது மனைவியுடன் வாழவில்லை என்றும் அவருக்கு வேறொரு காதலி இருக்கிறார் என்றும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.