சிங்கப்பூரில் உள்ள ஆகச் சிறந்த நிறுவனங்களின் தரத்தை நிர்ணயித்துப் பட்டியலிடும் கருத்தாய்வு நடத்தப்படுகிறது. மூன்றாவது ஆண்டாக நடத்தப்படும் இந்தக் கருத்தாய்வு நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் 20ஆம் தேதியன்று நிறைவுறும்.
அனைத்து துறைகளிலிருந்தும் மொத்தம் 200 ஆகச் சிறந்த நிறுவனங்கள் கருத்தாய்வில் இடம்பெறுகின்றன. இந்த நிறுவனங்கள் குறைந்தது 200 ஊழியர்களை வேலைக்கு வைத்திருப்பவை.
தங்கள் நிறுவனங்களில் வேலை செய்யுமாறு நண்பர்களையோ உறவினர்களையோ ஊழியர்கள் ஊக்குவிப்பார்களா என்ற அம்சத்தை முக்கியமாகக் கொண்டு நிறுவனங்கள் பட்டியலிடப்படும்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸில் முடிவுகள் வெளியிடப்படும்.
ஜெர்மனியின் ஸ்டட்டிஸ்டா நிறுவனமும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸும் இணைந்து கருத்தாய்வை நடத்துகின்றன. சென்ற ஆண்டுக்கான சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் கூகல் முதலிடத்தைப் பிடித்தது. ஆப்பிள் நிறுவனம் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. சென்ற ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இணையம்வழி நடத்தப்பட்ட ஆய்வில் 9,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தற்போது உலகைப் பெரிதும் பாதிக்கும் கொவிட்-19 பிரச்சினை போன்ற நெருக்கடியான சூழல்களில் ஊழியர்களிடையே உள்ள ஒற்றுமை, வேலை நிலைத்தன்மை, நிர்வாகம் ஊழியர்களிடம் காட்டும் விசுவாசம் போன்ற அம்சங்களுக்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்று ஸ்டட்டிஸ்டா கூறியது.

