சிங்கப்பூரில் புதிதாக 59 பேருக்குச் சமூகத்தொற்று ஏற்பட்டதாக நேற்று மதியம் தெரிவிக்கப்பட்டது.
அவர்களில் 26 பேர் முந்தைய கொவிட்-19 நோயாளிகளுடன் தொடர்புடையவர்கள். ஏற்கெனவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
இதர 14 பேருக்கு முந்தைய நோயாளிகளுடன் தொடர்ந்து இருந்தது. இவர்களுக்கு தொற்று இருந்தது தடமறிதல் மூலம் தெரியவந்தது.
எஞ்சிய 19 பேருக்குத் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இத்தகைய தொடர்பில்லாத தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 17ஆக இருந்தது.
சமூகத்தொற்றுக்கு ஆளான 59 பேரில் ஐந்து பேர் 70 வயதுக்கும் மேற்பட்ட முதியர்கள். அந்த ஐந்து பேரில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களும் முற்றிலும் போட்டுக்கொள்ளாதவர்களும் அடங்குவர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
வெளிநாட்டில் இருந்து இங்கு வந்த யாருக்கும் தொற்று இல்லை என்று அமைச்சு குறிப்பிட்டது.
புதிதாக தொற்று ஏற்பட்டவர்களையும் சேர்த்து கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 66,012ஆக உள்ளது.

