243 பாசிர் பாஞ்சாங்கில் அமைந்துள்ள மேப்பல் பேர் பாலர் பள்ளிக் கட்டடம் செவ்வாய் இரவு தீப்பற்றியது.
தீயணைப்பாளர்கள் வலுக்கட்டாயமாகக் கட்டடத்தின் உள்ளே செல்ல நேரிட்டபோது அக்கம் பக்கத்தில் வசிப்போர் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். பெரும்பாலும் கட்டடத்தின் முன் பகுதியில் மட்டுமே தீப்பற்றியதாகவும் பள்ளியின் உடைமைகள் பாதிக்கப்பட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. மேலும் அவ்வேளையில் யாரும் கட்டடத்தில் இல்லை என்றும் அது கூறியது. தீ மூண்ட காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
வெஸ்ட் கோஸ்ட் அடித்தள நாடாளுமன்ற உறுப்பினர் ரேச்சல் ஓங் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அவர்களுள் பெரும்பாலோர் இரவு 8.30 மணிக்குள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாகவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
மேலும் கிராப் உணவு விநியோகிப்பாளர் ஒருவரும் நீல நிற ஆடை அணிந்திருந்த ஆடவர் ஒருவரும் கட்டடத்தில் யாரும் இல்லாததை உறுதி செய்ய கட்டடத்தினுள் நுழைந்ததைத் தான் அறிந்துகொண்டதாகவும் அவர்களது தைரியத்தைத் தான் பாராட்டுவதாகவும் விரைவில் அவர்களை முறையாகச் சந்தித்து நன்றி கூற விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

