இந்த ஆண்டின் அதிபர் கல்விமான் விருது இரண்டு பேருக்கு கிடைத்து இருக்கிறது. சிங்கப்பூர் கடற்படையைச் சேர்ந்த லெஃப்டினெண்ட் ஆங் சைன் யீ அவர்களில் ஒருவர்.
ஆர்வம் மிகுதியால் இந்த 20 வயது பெண்மணி தனது 17வது வயதில் தற்காப்பு அமைச்சு நடத்திய முகாம் ஒன்றில் சேர்ந்தார். அங்கு அவருக்கு கிடைத்த அனுபவம், கடற்படையில் வாழ்க்கைத்தொழிலை மேற்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை அவரிடம் ஏற்படுத்தியது.
ஹுவா சோங் பள்ளியின் முன்னாள் மாணவியான அவர், அமெரிக்காவில் உள்ள பிரௌன் பல்கலைக்கழகத்தில் பொருளியல், புள்ளி விவரவியல் படிப்பார்.
அதிபர் கல்விமான் விருதைப் பெற்றிருக்கும் மற்றொருவர் ராஃபிள்ஸ் பள்ளியைச் சேர்ந்த முன்னாள் மாணவி வோங் சியா யிங், 19. இவர் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் பயில்வார். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் கலந்துகொண்ட அதிபர் ஹலிமா யாக்கோப், எதிர்கால தலைவர்கள் என்ற முறையில் இந்தக் கல்விமான்கள் தொடர்ந்து உறுதியோடும் அர்ப்பணிப்பு உணர்வோடும் சேவையாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
''மீட்சித் திறனுடன் சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்ளும் ஆற்றலுடன் திகழுங்கள். இப்படி திகழ்வதன் மூலம் நீங்கள் சிங்கப்பூரர்களின் நலன்களை தலைசிறந்த முறையில் நிறைவேற்றும் கொள்கைகளை உருவாக்க முடியும்,'' என்று அதிபர் குறிப்பிட்டார்.
அதிபர் கல்விமான் விருது என்பது அரசாங்க தேர்வாணையம் வழங்கும் இளநிலை பட்டப் படிப்பு மாணவர்களுக்கான மிகவும் சிறப்புமிக்க விருதாகும். அது 1966 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

