சாஃப்ரா தெம்பனிசில் புதிய தொற்றுக்குழுமம் உருவானபோதும் அது மூடப்படாமல் தொடர்ந்து செயல்படும். நேற்று முன்தின நிலவரப்படி அங்குள்ள தொற்றுக் குழுமத்தில் ஒன்பது பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது.
தொற்றுள்ள ஆறு பேர், கடைசியாக கடந்த 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வந்துசென்றதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு விடுத்த அறிக்கையில் சாஃப்ரா கூறியது.
அவர்களுடன் அணுக்கமான தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப் பட்டுவிட்டனர்.
மேலும், தொற்று ஏற்பட்ட நபர்கள் சென்ற அனைத்து இடங்களில் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் வழிகாட்டிகளின்படி கிருமிநாசினி தெளிக்கப்பட்டிருப்பதாக சாஃப்ரா கூறியது.
அனைத்து சாஃப்ரா வளாகங்களிலும் பாதுகாப்பு இடைவெளி நடைமுறைகள் தொடரும் என்றும் அமைப்பு கூறியது.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் இருவராகத் தான் அங்கு செல்ல முடியும்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், அதிகபட்சம் ஐந்து பேர் கொண்ட குழுக்களில் அங்குள்ள உணவு பான கடைகளில் அமர்ந்து உண்ணலாம்.
அவர்கள் முகக் கவசத்தைக் கழற்றிவிட்டு பூப்பந்து, ஸ்குவாஷ் போன்ற சில உட்புற விளையாட்டுகளில் ஈடுபடலாம் என்று சஃப்ரா தெரிவித்தது.
தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கும் போடாதோருக்கும் சாஃப்ரா கடைப்பிடிக்கும் வெவ்வேறு நடைமுறைகளில் இவை அடங்கும் என்று அமைப்பின் இணையத்தளத்தில் கூறப்பட்டது.

