ரிவர் வேலி ஹை பள்ளியில் சக மாணவரைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 16 வயது மாணவர், தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பிறகு மெய்நிகர் வாயிலாக முதன்முறையாகத் தனது பெற்றோருடன் பேசியிருக்கிறார்.
அதற்குக் காவல்துறையினர் ஏற்பாடு செய்ததாகத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் தெரிவித்தது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று மாணவர் மெய்நிகர் வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அப்போது மாணவரின் நலனை விசாரிப்பதற்கு வகைசெய்ய ஐந்து நிமிடங்களுக்கு பெற்றோருடன் பேச அனுமதி வழங்குமாறு அவரின் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அரசாங்கத் தரப்பு முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு இருந்ததும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்ததும் அதற்குக் காரணங்கள் என்பது அதன் வாதம்.
மாவட்ட நீதிபதி பிரெண்டா டான் கோரிக்கையை நிராகரித்தார். தகுந்த நேரத்தில் மாணவர் அவரது பெற்றோருடன் பேசுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மாணவருக்கு மனநலச் சோதனை நடத்த அவரை இரண்டு வாரங்களுக்கு மேல் சாங்கி சிறைச்சாலையின் மருத்துவ நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்குமாறு செவ்வாய்க்கிழமையன்று உத்தரவிடப்பட்டது.
தனது பள்ளியில் பயின்ற 13 வயது மாணவரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் மாணவர் மீது சென்ற மாதம் 20ஆம் தேதியன்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அதற்கு முதல் நாளன்று ரிவர் வேலி ஹை பள்ளியில் கொலை நிகழ்ந்தது.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மாணவர் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்ததைத் தொடர்ந்து 2019ஆம் அண்டில் மனநலக் கழகத்தில் சிகிச்சை பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
ஆனால் 18 வயதுக்கு உட்பட்ட கொலைக் குற்றவாளிகளுக்கு அதற்குப் பதிலாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.வழக்கு இம்மாதம் 24ஆம் தேதியன்று மீண்டும் விசாரணைக்கு வரும்.
ரிவர் வேலி ஹை பள்ளி கொலை வழக்கு

