வீட்டிலிருந்து செயல்படும் நிறுவனமான 'தி பீச்சி ஷுகர்மேக்கர்' தயாரித்த கேக் வகைகளைச் சாப்பிட்டு 15 பேர் நோய்வாய்ப்பட்டனர்.
அவர்களில் ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இரண்டு சிறுவர்கள் அடங்குவர்.
அவர்களுக்கு மூன்று மற்றும் நான்கு வயது. அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்துவதாக சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் உணவு முகவையும் நேற்று தெரிவித்தன.
இம்மாதம் 5ஆம் தேதியிலிருந்து 7ஆம் தேதி வரை அந்த நிறுவனம் தயாரித்த கேக் வகைகளைச் சாப்பிட்டவர்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இம்மாதம் 7ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் பெண்டிமியர் சாலையில் உள்ள 'தி பீச்சி ஷுகர்மேக்கர்' நிறுவனத்திடமிருந்து தமது மகனின் பிறந்தநாள் கேக்கைப் பெற்றுக்கொண்டதாக திருவாட்டி லுவோ ஜே. ஒய். தெரிவித்தார்.
கேக் உருகியிருந்ததைக் கவனித்ததாகவும் அது பற்றி நிறுவனத்திடம் கூறியபோது கவலைப்படாமல் கேக்கைச் சாப்பிடலாம் என்று தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் திருவாட்டி லுவோ கூறினார்.
கேக்கைச் சாப்பிட்ட தமது மகன் உட்பட குடும்பத்தாரும் விருந்தினர்களும் பணிப்பெண்ணும் நோய்வாய்ப்பட்டதாக அவர் தெரிவித்தார். தமது மகன் வலியால் துடித்ததாகவும் அவன் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் திருவாட்டி லுவோ கூறினார்.
உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் சுத்தம், சுகாதாரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைவூட்டப்பட்டுள்ளது.

