சிங்கப்பூரில் கொள்ளைநோய் பரவல் காலத்தில் தனியார் வாடகை கார்களைக் காட்டிலும் டாக்சி களில் மேற்கொள்ளப்பட்ட பயண எண்ணிக்கை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.
கடந்த மே மாதம் கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டபோது டாக்சி, வாடகை கார் பயணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதை நிலப் போக்குவரத்து ஆணையம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரி வித்துள்ளன.
அதிகமானோர் வீட்டில் வேலை செய்யும் ஏற்பாட்டுக்கு மாறியதைத் தொடர்ந்து மே, ஜூன் மாதங்களில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லக்கூடிய அன்றாட பயணங்களின் எண்ணிக்கை 21 விழுக்காட்டுச் சரிவைச் சந்தித்தன.
இரு மாதங்களில் 959,000 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல தொலைபேசி வாயிலாக முன்பதிவு செய்வதும் 22 விழுக்காடு குறைந்து அன்றாட எண்ணிக்கை 744,000 ஆனது. இத்தகைய முன்பதிவு பெரும்பாலும் தனியார் வாடகை கார்களுக்காக செய்யப்படுபவை.
அதே நேரம் சாலையோரத்தில் டாக்சிகளை நிறுத்தி மேற்கொள்ளப்படக்கூடிய பயணங்களின் எண்ணிக்கை வியப்பான மீட்சியைக் காட்டின. அதன் அன்றாட எண்ணிக்கை 16 விழுக்காடு மட்டுமே குறைந்து 215,000 ஆனது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையில் சர்கிட் பிரேக்கர் என்னும் தொற்றுநோய் முறியடிப்புக் கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தபோதும் இதேபோன்று நிகழ்ந்தது.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடும்போது அந்த மூன்று மாதங்களில் அன்றாட தொலைபேசிப் பதிவு முறையிலான அன்றாடப் பயணங்களின் எண்ணிக்கை 60.4 விழுக்காடு சரிந்தது. ஆயினும் சாலையோரம் மேற்கொள்ளப்படும் டாக்சி பயணங்களின் எண்ணிக்கை 53 விழுக்காடு மட்டுமே குறைந்து 228,000 ஆகி இருந்தது.
இந்த வேறுபாட்டுக்கான காரணத்தை சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் போக்குவரத்துப் பொருளியல் நிபுணர் வால்டர் திசேரா விளக்கினார்.
“சாலையோரம் மேற்கொள்ளப்படும் பயணங்கள் அதிகம் திட்டமிடப்படாததைப் போன்றவை. ஆனால், தொலைபேசி வாயிலாக மேற்கொள்ளப்படும் பயணங்கள் அதிக நெகிழ்ச்சித் தன்மை வாய்ந்தவை. எந்த நேரத்திலும் மாற்றியமைக்கக்கூடியதாகவும் ரத்து செய்யப்படக்கூடியதாகவும் அத்தகைய பயணங்கள் இருக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், டாக்சியில் தன்விருப்பப்படி மேற்கொள்ளப்படும் பயணங்கள் சில முக்கிய சந்தைப் பகுதிகளில் வலுவானதாகத் தொடருகின்றன. குறிப்பாக, மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்கள், எம்ஆர்டி நிலையங்கள், கடைத்தொகுதிகள் போன்றவற்றில் உள்ள டாக்சி நிறுத்தங்கள் இந்த எண்ணிக்கை உயரக் காரணமாகின்றன.
“சாலையோரம் டாக்சிகளை நிறுத்தி மேற்கொள்ளப்படும் பயணம் பழகிப்போன ஒன்று. பெரும்பாலும் மூத்த குடிமக்கள் இவ்வாறு செய்வார்கள். மருத்துவ முன்பதிவுகளை நிறைவேற்ற, தடுப்பூசி போட்டுக்கொள்ள, தேவையான பொருட்களை வாங்க என பல்வேறு நோக்கங்களுக்காக அவர்கள் டாக்சி பயணம் மேற்கொள்வார்கள்,” என்றார் திரு வால்டர்.
சிங்கப்பூரின் ஆகப்பெரிய டாக்சி நிறுவனமான கம்ஃபர்ட்டெல்குரோவின் பேச்சாளர் திருவாட்டி டேமி டான் கூறுகையில், “டாக்சிகள்தான் பயணிகளுக்கு எளிதான பயணமுறையைத் தருகிறது. சாலையோரம் நிறுத்தி பயணம் மேற்கொள்ளும் வசதியை டாக்சிகள் தருகின்றன. முன்பதிவு முறையிலான பயணங்கள் சரிந்ததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்,” என்றார்.